2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கழிவுகளை கொட்டுவோரை கண்டறிவோம்

Princiya Dixci   / 2022 மே 12 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டி, சூழலை மாசுபடுத்தும் நபர்களைக் கைது செய்து, தண்டிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று (12) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் வழமை போன்று தொழிற்படாத காரணத்தால், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு, திண்மக்கழிவகற்றல் சேவையை சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றோம்.

“இந்நிலையில், சாய்ந்தமருது கரைவாகு பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தை சூழவுள்ள குளங்கள், கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத் திட்டத்திற்கு பின்னாலுள்ள ஆற்றங்கரைப் பகுதிகள் மற்றும் தோணாப் பகுதிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆடு, மாடு மற்றும் கோழிக் கழிவுகளையும் இதர குப்பைகளையும் கொட்டி வருகின்றனர்.

“மாநகர சபையின் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற்ற கோழிக்கடைகளில் சேர்கின்ற கோழிக்கழிவுகள் தினமும் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற பிரத்தியேக திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

“அவ்வாறே மாநகர சபையின் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற்ற மாட்டிறைச்சிக் கடைகளுக்கான மாடுகள், விலங்கறுமனைகளில் அறுக்கப்படுவதனால், அக்கழிவுகளும் முறையாக அகற்றப்பட்டு வருகின்றன.

“ஆனால், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்ற கோழிக் கடைகளினதும் தனி நபர்களினதும் கோழிக் கழிவுகளும் வீடுகளிலும் அங்கும் இங்குமாகவும் சட்டவிரோதமாக அறுக்கப்படும் ஆடு, மாடுகளின் கழிவுகளுமே மேற்படி நீர்நிலைகளில் கொட்டப்படுவதாக அறிய முடிகின்றது.

“அத்துடன், வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற கழிவுகளையும் சிலர் பொறுமையில்லாமல் உடனுக்குடன் இவ்வாறான நீர்நிலைகளிலும் தெருக்களிலும் பொது இடங்களிலும் வீசி வருகின்றனர்.

“இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .