2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலையக பல்கலைக்கழக கனவு நனவாக வேண்டும்

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மலையகத்திற்கென தனியான தேசிய பல்கலைகழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியமானது. அதேநேரத்தில் கனவாக இருக்கின்ற பல்கலைகழக விடயம் நனவாக வேண்டுமென திறந்த பல்கலைகழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற கல்வியியல் பேராசிரியர் தை.தனராஜ் தெரிவித்தார்.

இராகலை உயர்நிலை பாடசாலையில் ஆசிரியர் சிகரம் பிலீப் இராமையாவை கௌரவித்து இடம் பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“மலையகத்திற்கு ஏன் தனியான ஒரு தேசிய பல்கலைகழகம் அவசியம் என்பது தொடர்பில் மறைந்த பேராசிரியர் சந்திரசேகரனும் நானும்   பல கட்டுரைகள் எழுதியுள்ளோம்.

அண்மைக்காலத்தில் இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சருடனும் தொடர்பு கொண்டு விளக்கிய போதும் மலையகத்திற்கான தனியான தேசிய பல்கலைகழகம் அமைக்கப்படும் விடயம் வெறும் கனவாகவே இதுவரை இருக்கிறது” என்றார்.

மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது குறிப்பாக ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலை கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், மூன்றாம் நிலை கல்வியாக உயர்க்கல்வி மற்றும் பல்கலைகழக கல்வியில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம் என்றார்.

இதனை மாற்றி ஏனைய சமூகங்களைப் போல எமது மாணவர்களும் பல்கலைகழகம் சென்று பட்டதாரிகளாக வரவேண்டுமானால் எமக்கு தனியான தேசிய பல்கலைகழகம் மலையகத்தில் உருவாக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் எமது அரசியல் தலைவர்கள் ,கல்வியாளர்கள்,சமூக போராளிகள் யாவரும் ஒன்று சேர்ந்து எங்களுக்கான ஒரு தேசிய பல்கலைக்கழகத்தை மலையகத்தி்ல் உருவாக்க மிக முன்னின்று பாடுப்பட வேண்டும்  என்பதை வலியுறுத்தி தாழ்மையான கோரிக்கையை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

மலையகத்திற்கான தனியான தேசிய பல்கலைகழகம் அமைக்கப்பட தடையாக இருப்பது    என்ன என்பது தொடர்பில் நீ்ங்கள் உணர்வது தொடர்பில் விளக்க முடியுமா என கேள்வி  எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பேராசிரியர் மலையகத்திற்கு தனியான தேசிய பல்கலைகழகம் அமைப்பது தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை வலிமையான கோரிக்கையாக இல்லை என்பதுதான் தடையாக உள்ளது என்றார்.

உதாரணமாக பார்க்கின்ற போது தென்கிழக்கு பல்கலைகழகம் ஒன்று இருக்கிறது. இப் பல்கலைக்கழகம் அரசியல் கோரிக்கையால் உருவாக்கப்பட்டது.

அதேபோல யாழ்ப்பாண பல்கலைகழகம்,கிழக்கு பல்கலைகழகம் இருக்கின்றன இவை முக்கியமான பல்கலைகழகங்களாகும்.ஆனால் தென் கிழக்கு பல்கலைகழகம் அண்மையில் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரால் அர்பணிப்பினாலும் விடாமுயற்சியும் அது உருவாக்கப்பட்டது என்றார்.

மலையகத்துக்கான தனியான தேசிய பல்கலைகழகம் அமைக்கப்படவேண்டும் அதற்கு   ஒரு தலைமைத்துவம் எமக்கு அவசியமாக இருக்கின்றது. அவ்வாறு ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்படும் போதுதான், மலையக தேசிய பல்கலைகழக விடயம் சாத்தியமாகும் ,கனவும் நனவாகும். இந்த கனவு நனவாகினால் மலையகம் ஏனைய சமூகத்தை போல உயர் கல்வியில் உயர்வு நிலை அடையும் என்றார்.

மலையகத்தின் 200 வருட வரலாற்றில் எமது சமூகத்தில் உருவாகியுள்ள பேராசிரியர்கள் ஒன்பது பேர் மாத்திரமே. அந்த ஒன்பது பேரில் இருவர் வேலை செய்கிறார்கள் ஏனையோர் மறைந்து அல்லது ஓய்வு பெற்றுள்ளனர்.

எமது சமூகத்திற்கு வந்த மொத்த (பிரியூலர்) எண்ணிக்கை 30 ,பட்டதாரிகள் 15 பேர். நான் வேலை செய்த ஒரே பல்கலைகழகத்தில் 59 பேர் (PHT)யினரும் 25 பேராசிரியர்களும் இருக்கின்றார்கள்.

 200 வருடம் வாழும் எமது  சமூகத்திலிருந்து பேராசிரியர்கள் ஒன்பது பேர்தான் வந்திருக்கிறார்கள் அதிலும் தற்போது இருவர் மாத்திரமே வேலை செய்கிறார்கள் முப்பது பேர் மாத்திரம் தான் விரிவுரையாளர்களாக இருக்கின்றனர்.

இந்த நாட்டில் ஆறாயிரம் பேர் விரிவுரையாளர்கள் பல்கலைகழகங்களில் இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய அவர் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமானால் மலையகத்தில் தனியான தேசிய பல்கலைகழகம் உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தி கூறுகின்றேன் என்றார்.

மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் பல்கலைகழகத்தில்  அனைவரும் படிக்கப் போகிறார்கள் அதேநேரத்தில் எமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக அந்த பல்கலைகழகத்தை ஒரு கருவியாக பயன் படுத்திகொள்ள முடியும்.

இதை அனைவரும் விளங்கி கொண்டால் மலையகத்திற்கு தனியான ஒரு தேசிய பல்கலைகழகம் அவசியம் என்பதை உணரமுடியும் என்றார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X