2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்த ஸ்டான்டர்ட் சார்ட்டட் பங்களிப்பு

S.Sekar   / 2021 ஜூன் 27 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு 4 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு வர்த்தகக் கடனை வழங்கி பங்களிப்பு வழங்கியுள்ளதாக ஸ்டான்டர்ட் சார்ட்டட் ஸ்ரீ லங்கா அறிவித்துள்ளது.

தேசத்தின் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில், இரு முன்னணி அரச வங்கிகளுடன் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி நெருக்கமாக செயலாற்றியிருந்ததுடன், தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அவசியமான கட்டணப் பட்டியலை துரிதமாக கையாண்டு, அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவசியமான நிதி வசதிகளை வழங்கியிருந்தது.

ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தேவரதந்திரி கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிராக போராடுவதற்கு ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி பங்களிப்பு வழங்கி வருகின்றது. இதனூடாக, உலகம் சிறந்த நாளைக்கான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க முடியும். கடந்த ஆண்டு இலங்கையில் முதல் அலை தாக்கம் பரவியிருந்த நிலையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு, நாடு முழுவதிலும் அவசர நிவாரண செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 500,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியிருந்தது. இலங்கை மக்களுக்கு இந்த தொற்றிலிருந்து விடுபடுவதற்கு வங்கியினால் வழங்கப்படும் பங்களிப்பின் மற்றுமொரு தொடர் அங்கமாக இந்த வர்த்தகக் கடன் அமைந்துள்ளது. அத்துடன் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் ‘here for good’ எனும் உறுதிமொழிக்கான ஆதாரமாக உள்ளது.” என்றார்.

ஸ்டான்டர்ட் சார்ட்டட் ஸ்ரீ லங்காவின் நிறைவேற்று பணிப்பாளரும் நிதி நிறுவனங்கள் பிரிவின் தலைமை அதிகாரியுமான லக்சான் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வியாபாரக் கடனில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் கைகோர்த்து ஸ்டான்டர்ட் சார்ட்டட் பங்களிப்பு வழங்கியுள்ளதையிட்டு திருப்தியடைகின்றது. இதனூடாக இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது உறுதியான வர்த்தக விநியோக வலையமைப்பில், முன்னணி சந்தை பங்குபற்றுநர்கள் காணப்படுவதுடன், இந்த தடுப்பூசிகளை நாட்டினுள் கொண்டு வருவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.” என்றார்.

சர்வதேச ரீதியில் சவால்கள் நிலவும் சூழலில், ஸ்டான்டர்ட் சார்ட்டட் குரூப், 2020 மார்ச் மாதம், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அர்ப்பணிப்புத் தொகையை, இலாப நோக்கற்ற நிதி பங்களிப்பாக நிறுவனங்களுக்கு வழங்க ஒதுக்கியிருந்தது. இதுவரையில் உலகளாவிய ரீதியில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அவசியமான சாதனங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை பங்களிப்பாக வழங்கியுள்ளது.

இந்த நிதி வழங்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தெற்காசியாவில் உள்வாங்கப்பட்ட முதல் நாடாக இலங்கை திகழ்கின்றது. இது மூலம் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை இலங்கையில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட தொகைகளினூடாக பெறப்பட்ட அனுகூலங்களில் பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகள் (PPE) உற்பத்தியாளர்களுக்கு மருத்துவ மற்றும் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் முகக் கவசங்கள் போன்ற தமது PPE உற்பத்தித் திறனை விஸ்தரித்துக் கொள்ள முடிந்ததுடன், தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள், அத்தியாவசிய PPE உற்பத்திகளை மேற்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அவசியமான உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .