2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிதைந்து போன மலையகம்

Editorial   / 2018 மார்ச் 16 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டின் மகிமை பற்றி பாடுங்கள்
ஒரு கீதம் அதில் சிதைந்து போன
சந்ததியின் அழுக்குரலையும் படமாக்க
மறந்தது ஏனோ?
 
மலைநாட்டை செழிப்பிக்க வந்த
எம்சந்ததியினரில் பலர் கடலுக்கு
இரையாகி போனார்களே, அதை
இந்த உலகத்தில் யாரறிவார்?
 
 
டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு
கண்ணீர் வடித்த உலகம்,
அதை விட பல மடங்கு வயிறுக்காக
நாடு மாறிவந்து கடலுக்குள் மாய்ந்த
எம்மவரை அடையாளம் காட்ட
மறந்தது ஏன்?
 
தேனீர் சுவைக்கு சொந்தக்காரன்
மலையகத்தான் அத்தேனீரை சுவைக்கும்
நாக்கு கூட, தேயிலைக்கு நன்றி
சொல்கிறதே ஒழிய, அதை காத்து
அதற்கு தனது உடலை உரமாக்கி
மடிந்த எம்மவனுக்கு இல்லை.
 
செடிகளுக்கு உரத்தைத்தான் இடுவதாக
நான் கேள்விபட்டேன். ஆனால் இங்கோ
தனது உதிரத்தையும் உரமாக்கி
செடியை செழிக்க செய்து, தன் உயிரை
அதற்குள்ளே வழங்கி செல்லும்,
உன்னத ஜீவனை இங்குதான் கண்டுக்கொண்டேன்
 
அழகு என்பது தனது உருவத்தின் வடிவு ,நிறம்
என்றே இத்தனை நாள் எண்ணி என்னை
நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன்.
 
உண்மையில் அழகு சுட்டெரிக்கும் மழை, வெயில்
இரண்டிலும் தனது நிறத்தையும் வடிவத்தையும்
இயற்கை தாய்க்கு அர்ப்பணித்து. அன்று மலர்ந்த
மலரைப்போல புன்னகையுடன் வேலைப்புரியும்
முகங்கள் தான் இவ்வுலகிலேயே பேரழகு
 
தொழில் செய்யும் போது விரல்கள் ரணமாகி
இரத்தம் பெருக்கெடுத்தாலும், அதை அக்கணமே
மறந்து தொழிலில் கவனம் செலுத்தும் உண்மையான
முதுகெமும்புள்ள உழைப்பாளி என்பதனை, மார்பு தட்டி
சொல்ல தகுதி உடையோன் இந்த மலையகத்தான் தான்
 
அடிமை தன வாழ்க்கைக்கு சொந்தக்காரன் என்று
தான் பல நூல்கள் அவனை பாடுகின்றது. உண்மையில்
அது இல்லை காரணம் அவன் பிறரை வஞ்சிக்க
தெரியாதவன் வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரன்
 நம்பிக்கையின் நட்சத்திரம் அதனால் தான்
 இன்று ஏமாளியாக காட்டப்பட்டு விட்டான்
 
இவனை பாடுவதற்கு இவ்வுலகம் இன்னும்
தயங்கி கொண்டுதான் இருக்கின்றது.
அவனது சந்தோசம் இன்று பொருளாதாரத்தில்
செயலிழந்து அநாதையாக நிற்கின்றது.
பொய் சொல்லி வாக்கு வாங்கி செல்லும்
அரசியல் வாதிக்கு தெரியாது சாப்பாடு
இன்றி வாழும் நிலைமைகள்.
அன்று பட்டினியால் மடியப்போய் பிழைப்புக்காக
ஓடிவந்து, இன்றும் வயிற்றுக்காக பறிதவிக்கும்
உள்ளத்தை கண்டறியவில்லை யாரும்.
 
இருப்பவனுக்கு அள்ளி கொடுக்கிறது இந்த
உலகம் இல்லாதவனை மடிந்த பிறகே கண்டு
கொள்கிறது. மலைநாட்டவனின் வாழ்க்கையும்
இப்படித்தான் சென்றுக் கொண்டிருக்கிறது
 
மலை நாட்டின் செழிப்புக்கு சிறந்த கல்விமான்கள்
தேவை ஆனால் இங்கு கல்விமான்கள் என்பவர்க்கே,
அதைப்பற்றி சொல்லிக்கொடுக்கும் நிலை.
கல்விசாலைகளுக்கு கூட போலியான தகுதிகள்
இருந்தால் அவனுக்கு போதுமானது தான் என்று சொல்கின்றது
 
இதில் எமது எதிர்காலத்தில் பிறக்கும் சந்ததியினர்
ஒரு விஞ்ஞானியாகவோ ,வைத்தியராகவோ வருவார்
என எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்.
மலையகத்தான் பகுத்தறிவினை பெறாவிட்டால்
என்றும் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறமுடியும்
என்பது கேள்விகுறியே (வ.யுகந்தினி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .