2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உத்தரவாத முதலீட்டு மூலம் எது?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 மார்ச் 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய சூழ்நிலையில், இலங்கையின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில், இதுதான் உத்தரவாத முதலீட்டு மூலமென்று எதையுமே முதலீட்டு ஆலோசகர்கள் சொல்வதற்குத் தயாராகவில்லை. ஆனால், எத்தகைய பொருளாதார நெருக்கடிகளிலும் உங்கள் சேமிப்புக்கு வங்கிகளைப் பார்க்கிலும் அதிக சேமிப்பு வருமானத்தைத் தரக்கூடிய முதலீட்டு மூலங்கள் இருக்கவே செய்கின்றது. அதில், அதிக பாதுகாப்பும் சேமிப்பும் கொண்ட முதலீட்டு வருமான மூலதனத்தையே இன்று நாங்கள் பார்க்கவிருக்கின்றோம்.  

வங்கியின் சேமிப்பு வருமானத்துக்கு மேலான வருமானத்தை இலங்கையில் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், உங்கள் சேமிப்பை அல்லது மேலதிக பணத்தை ஏதெனுமொன்றில் முதலீடு செய்தே ஆக வேண்டும். அப்படி, முதலீடு செய்கின்றபோது, அதற்கான இடர்நேர்வையும் (Risk) குறித்த முதலீடு செய்யும் நபர் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும். அப்படியாயின், இடர்நேர்வை எதிர்கொள்ள விரும்பாத எவரும் முதலீடுகளை செய்யவோ முதலீட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவோ முடியாதா எனும் கேள்வி எழுகின்றது அல்லவா ? 

சேமிப்புக்கு மேலான வருமானத்தை மிகக்குறைந்த இடர்நேர்வுடன் நமக்குத் தருகின்ற பாதுகாப்பான முதலீடுகளும் நம்மிடையே உள்ளன. ஆனால், அது தொடர்பில் போதுமான அறிவூட்டல்கள் இல்லாமையின் காரணமாக, முதலீடுகளை இழக்கக்கூடிய அதிகூடிய இடர்நேர்வுகளைக் கொண்ட முதலீடுகளை நோக்கிேய நாம் சென்றுகொண்டு இருக்கிறோம். அப்படியாயின், குறைவான இடர்நேர்வு அல்லது பூரணமாக இடர்நேர்வு விலக்கு அளிக்கப்பட்ட முதலீடு எது ? 

நம்பிக்கை பொறுப்பு அலகுகள், மிக எளிமையான முதலீட்டு வடிவமும், அனைவராலும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதுமான ஒன்றாகும். உதாரணத்துக்கு, ஒரு அசையா சொத்தொன்று உள்ளதென வைத்துக் கொள்வோம்.

அதன் பெறுமதி, மிக அதிகமாக இருக்கின்றது. அதன்போது, உங்களால் அதைத் தனித்துக் கொள்வனவு செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் அந்தச் சொத்தின் பெறுமதி அதிகரிக்கும்போது, அதனால் பயன்பெற முடியுமென நம்புகிறீர்கள். அப்போது, உங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ துணையாகக்கொண்டு அந்தச் சொத்தை வாங்கிக் கொள்ளுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். இப்போது, அந்தச் சொத்தின் பெறுமதி அதிகரிக்கும்போது, அதை விற்பனை செய்து, அதன் இலாபத்தை முதலீட்டுடன் சேர்த்து அனைவரும் பங்கு போட்டுக்கொள்ள முடியும்.  

இதே போன்ற செயன்முறைதான், அலகுகளும் கொண்டு இருக்கின்றது. இதில், நண்பர்கள், உறவினர்களுக்கு பதிலாக, பல முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருக்கும். இதன்போது, உங்களது பணம் உங்களின் சார்பாக தனித்து ஒரு பங்கில் முதலிடப்படாமல், வெவ்வேறு நிறுவனத்தின் பங்குகளிலும் அரச பிணையப் பத்திரங்களிலும், திறைசேரி முறி/ஊண்டியல்களிலும் முதலிடப்படும். இவற்றின் பங்கு அதிகரிக்கும்போது, அதன் பெறுமதி அதிகரிப்பதுடன், உங்களது இலாப அளவும் அதிகரிக்கும். 

பெரும்பாலான மக்களிடத்தேயுள்ள மிகமுக்கியமான சந்தேகங்களில் ஒன்று, நம்பிக்கைப் பொறுப்பு அலகுகள் ஒருவகை சேமிப்பா என்பதாகும்.  இது ஒருவகையில் சேமிப்பாக தெரிந்தாலும் உண்மையில் அதுவொரு முதலீட்டு மூலமாகும். இது போன்ற முதலீடுகள் மிகநீண்டகால முதலீட்டு வருமானத்தைக் குறிக்கோளாகக்கொண்டு முதலிடப்படுகிறது. 

நீண்டகாலத்தில் முதலீட்டுடன் இணைந்ததாக முதலீட்டு வருமானமும் கிடைக்கின்றபோது, இதுவொரு சேமிப்பு வடிவமாகத் தோன்றினாலும் உண்மையில் சேமிப்பை விடவும் அதிக வருமானத்தை இது கொண்டுள்ளது. நம்பிக்கை பொறுப்பு அலகுகளின் கடந்தகால வளர்ச்சியை எடுத்துப் பார்க்கின்றபோது, அவை தொடர்ச்சியாக வளர்ச்சியைக் கொண்டுள்ளதாக உள்ளதுடன், அவை பணவீக்கத்தை விடவும் அதிக வருமானத்தைக் கொண்டுள்ளதாக உள்ளது. குறிப்பாக, இலங்கையின் பங்குசந்தை மிக மந்தமாக உள்ள நிலையிலும் அல்லது ஏற்றத்தாழ்வை மிக அதிகமாக கொண்டுள்ள நிலையிலும், உங்கள் அலகுகளின் மூலமான வருமானத்தில் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சிநிலை காணப்படுவது முதலீட்டு உத்தரவாதத்தை மறைமுகமாக உறுதிசெய்வதாகவே உள்ளது. 

உண்மையில், நம்பிக்கை பொறுப்பு அலகு நிறுவனங்கள் ஒரு முதலீட்டாளரின் இடநேர்வை குறைக்கும் வகையில் அவரது முதலீட்டை பல்வேறு மூலங்களில் முதலீட்டாளர் சார்பாக முதலீடு செய்கிறது. உதாரணத்துக்கு, 100 ரூபாய் பெறுமதியான அலகொன்றை நீங்கள் கொள்வனவு செய்கின்றீர்கள் எனில், அதில் உங்கள் வருமானத்துக்குள்ள இடர்நேர்வை சமப்படுத்தக்கூடிய வகையில் உங்கள் சார்பாக, உங்கள் நம்பிக்கைப் பொறுப்பு அலகுகள் நிறுவனம் பங்குகள், அரச பிணையப் பத்திரங்கள், திறைசேரி பத்திரங்களில் அந்த 100 ரூபாயைப் பிரித்து முதலீடு செய்திருக்கும். எனவே, அதற்கேற்ப உங்களது மூலதன இலாபமும் உங்களை வந்து சேருவதால், ஒப்பீட்டளவில் ஏனைய முதலீட்டு மூலங்களுடன் ஒப்பிடுமிடத்து மிகசிறந்த வருமானத்ைதக் கொண்டதாகவும் பாதுகாப்​ைபக் கொண்டதாகவும் அலகுகள் உள்ளது. 

நம்பிக்கைப் பொறுப்பு அலகுகள் ஒப்பீட்டளவில் வங்கி வட்டிவீதங்களை விடவும் அதிக வருமானத்தைத் தருவதுடன், பங்குசந்தை உட்பட ஏனைய இடநேர்வு அதிகமான முதலீடுகளுடன் ஒப்பிடுமிடத்து குறைவான அல்லது பூச்சிய இடநேர்வைக் கொண்டதாகவே இருக்கிறது. 

அலகுகள் குறைந்தது 100 ரூபாய் அல்லது 1,000 ரூபாயுடன் ஆரம்பிக்கப்படக் கூடியது. ஏனைய முதலீட்டு வருமானங்களுக்கு, சில பல ஆயிரங்களோ, இலட்சங்களோ தேவையாக உள்ள நிலையில் முதலீடு செய்து பரீட்சித்துப் பார்க்கவும் அலகுகள் இலகுவானவை. 

அலகுகளின் மிகப் பிரதான நன்மையே, உங்களிடம் பணம் உள்ளபோது முதலீடு செய்ய முடிவது போல, விரும்பிய சமயத்தில் எதற்காகவும் காத்திராமல் பணத்தை மீளப் பெறவும் முடியும். இதுவே, ஏனைய பங்குகள், அசையாத சொத்துகளுடன் ஒப்பிடுமிடத்து இது மிக அதிகமான திரவத்தன்மையைக் கொண்டதாக உள்ளது. 

ஏனைய முதலீடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரிவிதிப்பில் சலுகைகளை கொண்டதாக உள்ளது. தற்போதைய நிலையில், வட்டிவீதங்களுக்கும் வரி விதிப்புகள் உள்ள நிலையில், குறித்த அளவுவரை அலகுகளின் வருமானத்துக்கு வரிச்சலுகை உண்டு. 

எனவே, ஒரு முதலீட்டாளர் தனது நிலையையும் தனது முதலீட்டையும் அடிப்படையாகக்கொண்டு, தனக்குப் பொருத்தமான நம்பிக்கை பொறுப்பு அலகுகளை நாடு பூராகவும் உள்ள மத்திய வங்கி, அரச நம்பிக்கை பொறுப்பு அலகுகள் குழுமம், கொழும்பு பங்குபரிவர்த்தனை ஆகியவற்றால் அங்கிகாரம் அளிக்கப்பட்ட தரகர்கள் ஊடாக கொள்வனவு செய்துகொள்ள முடிவதுடன், தமது எதிர்காலத்தையும் பாதுகாப்புடன் கூடியதாக அமைத்துக்கொள்ள முடியும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .