
-கு.சுரேன்
பாடும்மீன் அணியின் பின்கள வீரர் பிராங்கோவின் சாதுரியமான தடுப்பு ஆட்டம் கைகொடுக்க, சென்.மேரிஷ் அணியினை 2:0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது பாடும்மீன் அணி.
அரியாலை சனசமூக நிலையம் தமது 64 ஆண்டுகள் நிறைவு விழாவினையொட்டி யாழ். மாவட்ட கால்ப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியினை எதிர்த்து குருநகர் பாடும்மீன் அணி மோதியது.
இரண்டு வருடங்கள் தடையிலிருந்த சென்.மேரிஷ் அணி, வந்த வேகத்தில் கடந்த மாதம் குருநகர் பாடும்மீன் நடத்திய சுற்றுப் போட்டியில் சம்பயினாகியிருந்தது. அதே உற்வேகத்துடன் களமிறங்கியது.
அனுபவம் மிக்க வீரர்களின் பலத்துடன் பாடும்மீன் அணி களமிறங்கியது.
போட்டி ஆரம்பமாகியவுடன் சென்.மேரிஷ் அணியின் தாக்குதல் ஆட்டத் தொடங்கியது. இருந்தும் தாக்குதல் ஆட்டத்தினை பாடும்மீன் அணியின் பின்கள வீரர் பிராங்கோ தடுத்த வண்ணம் இருந்தார்.
இந்தநேரத்தில் பாடும்மீன் அணியின் திலீப் முதலாவது கோலினை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியாட்டத்தில் பாடும்மீன் அணி 1:0 என்று முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியாட்டம், முழுமையாக சென்.மேரிஷ் அணியின் பக்கமே இருந்தது. எனினும் அவ்வணியினால் பாடும்மீன் அணியின் பின்கள வீரர்களை உடைத்து கோலடிக்க முடியவில்லை.
போட்டியின் இறுதி நேரத்தில் சென்.மேரிஷ் வீரர் ஒருவர் முரண்பாடாக நடந்து கொண்டதினால், பாடும்மீன் அணிக்கு தண்டனை உதை வாய்ப்பு ஒன்று கிடைத்து. வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திய பாடும்மீன் அணி மேலும் ஒரு கோல் போட்டு, வெற்றியினை உறுதி செய்தது.
இறுதியில் பாடும்மீன் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பயினாகியது.