
-எஸ்.சொரூபன், சுமித்தி தங்கராசா
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக 2013ஆம் ஆண்டிற்கான மோட்டார் பந்தய நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இன்று யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
இந்நிகழ்வினை மோட்டார் பந்தய அமைப்பு, ஆசிய மோட்டார் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகம் நடாத்துகின்றது. இதனை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி நிகழ்வுகள் துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், மோட்டார் பந்தயம் ஆகிய பிரிவுகளாக இடம்பெறவுள்ளன. துவிச்சக்கர வண்டி, மரதன் ஓட்டங்களில் பங்குபற்ற விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பதாரி தனது மருத்துவச் சான்றிதழினை ஒப்படைத்தால் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும். 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பெண்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டத்தின் தூரம் 35 கிலோ மீற்றராகவும், ஆண்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டத்தின் தூரம் 104 கிலோ மீற்றராகவும் இடம்பெறும். மோட்டார் பந்தயமானது 200 கிலோ மீற்றர் தூரத்தினுள் வெவ்வேறு கட்டங்களாக இடம்பெறும். இதற்கான விண்ணப்பப் படிவங்களினை இல.52, ஸ்டான்லி வீதியில் உள்ள அலுவகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் 512ஆம் படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேவல, 51ஆம் படைப்பிரிவின் பிரிகேடியர் அபயநாயக்க, கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகத்தின் தலைவர் டினேஸ் ஜெயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.