2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மீனவ சமுதாயத்தின் வாழ்வாதார்தை நலிவடைய செய்யும் முயற்சி

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'முல்லைத்தீவு மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்;தை நலிவடைய செய்யும் முயற்சி இடம்பெறுகின்றது' என வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை(22) தெரிவித்தார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொர்பாக மீனவர்களால் அவரிடம் முiயிடப்பட்டதையடுத்து மாத்தளன் மற்றும் சாலை மீனவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'முல்லைத்தீவு மாவட்டத்தில், 27 கடற்றொழில் சங்கங்களில் உள்ள சுமார் 4143 மீனவர்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்நிலையில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதிகள் வழங்கி அவர்கள் சட்டவிரோத தொழில்முறைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது முல்லை மாவட்ட மீனவ சமுதாயத்தின் எதிர்கால வாழ்வாதார முன்னேற்றங்களை கேள்விக்குறியாக்குகிறது.

சிங்கள குடியேற்றங்கள், தமிழர் காணி அபகரிப்பு, சட்டவிரோத கருங்கல் அகழ்வு-மண் அகழ்வு, இராணுவ அழுத்தம் என்று அனைத்து வழிகளிலும் முல்லையில் அநீதிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில் மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தையும் நலிவாக்கி முடக்கும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாத்தளன்-சாலை-பேப்பாரப்பிட்டி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறது.

அனைத்து வழிகளிலும் மக்களின் வாழ்வாதார முடக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதன் ஒரு கட்டமாகவே மீனவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் அட்டைத்தொழில், சங்கு குளித்தல் போன்றவையும் நடைபெறுகிறது.

மாத்தளன், சாலை, பேப்பாரப்பிட்டி பகுதிகளில் அட்டைத்தொழில் செய்வதற்கான அனுமதிகள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பெறப்பட்டு தற்போது வெளிமாவட்ட மீனவர்கள் குறித்த பகுதிகளுக்கு சுமார் 300 வள்ளங்களுடன் வந்து தொழில் செய்கிறார்கள்.

மீன்பிடி விதிகளை மீறாது அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு யுத்தத்தால் முடங்கிய எங்கள் வாழ்வாதாரத்தை கடற்றொழில் மூலம் நிலைபெறச்செய்து கொண்டிருந்த நிலையில் கடலட்டை பிடித்தல், சங்கு குளித்தல் போர்வையில் எம் இடங்களை ஆக்கிரமித்து எம் வாழ்வாதார நெறிகளை சிதைக்கும் நிலை எங்களை மிகவும் பலவீனப்படுத்துகிறது என முல்லைத்தீவு மீனவர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

இந்தவகையில் சட்டதிட்டங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மீனவ சங்கங்களின் ஆலோசனையையும் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும். இத்தொழிலில் 20 கிலோமீற்றருக்கு அப்பால் தான் தொழில் செய்யவேண்டும் என்று அனுமதிப்பத்திரத்தில் இருந்த போதும் மிகக்குறைந்த தூரங்களிலும் இத்தொழில் செய்யப்படுகிறது. இதனை அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதைத்தவிர சில நேரங்களில் சட்டவிரோத தொழில் முறையான வெடிவைத்து மீன்பிடித்தலை செய்கிறார்கள். கணவாய் கூடு வைத்து தொழில் செய்தவதால் மற்றைய மீனவர்களது வலை சேதமடைகிறது. சங்குகள் அகழ்வதன் மூலமாக மீன்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது நாயாற்றுப்பகுதியில் ஆரம்பத்தில் வந்து தொழில் செய்தவர்கள் எனக்கூறி 38 சிங்கள மீனவர்களுக்கு அனுமதி கொடுத்து அதன் பின் 34 மீனவர்களை அவர்களுடைய வாரிசுகள் என மொத்தம் 72 மீனவ குடும்பங்கள் தொழில் செய்வார்கள் என்ற அனுமதியை வழங்கிவிட்டு இப்போது 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் அத்துமீறி குடியேறி இருக்கிறார்கள். அவர்களால் எமது கடற்கரையில் வெளிச்சம் போட்டு மீன்பிடித்தல், சுருக்குவலை போன்ற சட்டவிரோத தொழில்களும் செய்யப்படுகிறது. இவைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் மீண்டுவரக்கூடிய ஒவ்வொரு வழியும் மூடப்படுவதையே இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேற்கூறிய தொழில்கள் மூலம் எமது வளங்கள் அழிக்கப்படுவதனால் எமது மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குகின்றார்கள்.

சட்டவிரோத மீனவர் குடியேற்றம் முதல்கொண்டு எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அட்டைத்தொழிலும் சட்டவிரோத தொழில்முறைகளும் நிறுத்தப்படவேண்டும். அதுவே யுத்தத்தால் பாதிக்கபட்ட எம் முல்லை மீனவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இயலுமான வழிகள் மூலம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீனவ சமுதாயத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் முயற்சிகள் எம்மால் எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X