2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள்  12 அம்சக்  கோரிக்கையை  முன்வைத்து நகரசபை நுழைவாயிலில்  பணிப்பகிஷ்கரிப்பில் திங்கட்கிழமை (30) ஈடுபட்டனர்.

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதாரத் தொழிலாளர்களில் 07 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும்.
வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் ஆளணி அதிகரிக்கப்பட வேண்டும்.    வவுனியா நகரசபையால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காவல் கடமை பதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  உள்ளக வெற்றிடங்கள் உள்ளகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.    30 வருடங்களாக பணியாற்றுபவர்களுக்கு இதுவரை தர உயர்வு வழங்கப்படாமையால், அரச சுற்றுநிரூபம் 01- 2001 இற்கு அமைய தரமுயர்த்தல் வேண்டும். வேறு திணைக்களங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு சாப்பாட்டறை கட்டிக்கொடுக்கப்பட வேண்டும்.   தொழிலாளர்களுக்கான மலசலகூடம் புனரமைப்பு செய்து தரப்படவேண்டும். அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே பணி புரிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.  சுகாதார பகுதி நலன்புரிச்சங்கத்திற்கு நகரசபையால் சலுகைகள் வழங்கப்படவேண்டு;ம்.  உமா எனப்படும் சுகாதாரத் தொழிலாளியை தொழிலாளிகளுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.   வடமாகாண உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட ஆகிய 12 அம்சக் கோரிக்கையை இவர்கள் முன்வைத்துள்ளனர்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பில்  வவுனியா நகரசபையில் பணியாற்றும் அனைத்து சுகாதாரத்  தொழிலாளர்களும் பங்குபற்றினர்.

இதற்கிடையில்,  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  வடமாகாணசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி.சிவமோகன், ஆர்.இந்திரராஜா ஆகியோர் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இப்பணிப்பகிஷ்கரிப்பு  தொடர்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவிக்கையில்,

'வவுனியா நகரசபையில் பணியாற்றிவந்த தற்காலிக சமயாசமய ஊழியர்கள் 52 பேர் இருந்தனர். இவர்களில் 45 பேருக்கு வடமாகாண முதலமைச்சரினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 7 பேர் ஆளணி அங்கிகாரம் இல்லை என்ற காரணத்தை காட்டி வவுனியா நகரசபைச் செயலாளரினால் 2014ஆம் ஆண்டு 5ஆம் மாதம் முதலாம் திகதி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 
ஆனால்,  அந்த ஆளணி அங்கிகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் அன்றே செயலாளர் கோரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால்;, அவர் ஏதோ மறந்துவிட்டாரோ தெரியவில்லை. அன்று அதனை செய்திருந்தால் இன்று இந்தப் போராட்டம் வந்திருக்காது.

 வடமாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஏனைய விடயங்களையும் வலியுறுத்தி வருகின்றோம். எனவே இப்போராட்டத்தை வட மாகாணத்திற்கு விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்' எனத் என தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா நகரசபையின் செயலாளர் சி.சத்தியசீலனிடம்  கேட்டபோது,

'07 பேர் ஏற்கெனவே இந்த சபையில் நிமித்த அடிப்படையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக கடந்த 2012ஆம் ஆண்டு வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய சேவைக்காலத்தை ஒவ்வொரு வருடமும் நாம் புதுப்பித்துக்கொள்வோம்.
இந்த வகையில் இந்த 7 பேரையும் ஏற்கெனவே எமது நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கையை நாம் ஆளணிக்கு அமைவாக எடுத்திருந்தபோதிலும், அவர்கள் அந்த தகுதிகளை அதாவது புள்ளிகளை பெறாமையினால் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என எண்ணுகின்றேன். அத்துடன், ஆளணியும் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டது' எனக் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X