2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

6,348 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிக்க அனுமதி வழங்க முடியாது: தீர்மானம்

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6,348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் சனிக்கிழமை(5) மாலை செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி அபிவிருத்திக்குழு தலைவருமான றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது செட்குளம் பிரதேச மக்களின் காணிகள் உள்ளடங்களாக 6348 ஏக்கர் காணியை இராணுவத் தேவைக்காக வழங்குமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளரினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

'இக் காணிகள் தனியாருக்கு சொந்தமான காணிகளாகும். அதில் அருவி ஆற்றின் கீழ் விவசாயம் செய்கை பண்ணப்பட்ட 600 ஏக்கர் வயல் நிலங்களும் அடங்குகின்றன. தற்போது இக் காணிகளுக்குள் நுழைய முடியாதுள்ளது. இது இராணுவத்தினரின் காணி எனவும் பலகை நாட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்' என பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து ஒருங்கணைப்பு குழு கூட்டத்தில்; நீண்ட விவாதங்களின் இடம்பெற்றதன் பின்னர் இக் காணியை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது எனவும் அதனை மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் அமைச்சருடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், உனைஸ்பாறுக், முத்தலிப் பாறுக், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, ஜெயதிலக, வடமாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர பா. சத்தியசீலன், செட்டிகுளம் பிரதேச செயலாளர் என். கமலதாசன், செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் எஸ். சந்திரமோகன், பிரதேச சபை உறுப்பினர் சிவம், கிராம அலுவலர்கள், பொது அமைப்புக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X