2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கைக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கையணி சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய இசுரு உதானவை கசுன் ராஜித பிரதியிட்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, அவிஷ்க பெர்ணான்டோ, மினோத் பானுக மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும், மினோத் பானுக 36 (42) ஓட்டங்களுடனும், அடுத்து வந்த பானுக ராஜபக்‌ஷ ஓட்டமெதுவும் பெறாமலும் அடுத்தடுத்து யுஸ்வேந்திர சஹாலிடம் வீழ்ந்தனர்.

இதையடுத்து அவிஷ்க பெர்ணான்டோவும், தனஞ்சய டி சில்வாவும் இனிங்ஸை கட்டியெழுப்பிய நிலையில், 50 (71) ஓட்டங்களுடன் அவிஷ்க பெர்ணான்டோவும், 32 (45) ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவும் குறிப்பிட்ட இடைவெளிகளில் புவ்னேஷ்வர் குமார், தீபக் சஹரிடம் வீழ்ந்தனர்.

தொடர்ந்து வந்த சரித் அஸலங்கவும், தசுன் ஷானகவும் இலங்கையின் இனிங்ஸை மீளக் கட்டியெழுப்பிய நிலையில், 16 (24) ஓட்டங்களுடன் சஹாலிடம் தசுன் ஷானக வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வனிடு ஹஸரங்கவும் குறிப்பிட்ட நேரத்தில் தீபக் சஹரிடம் வீழ்ந்தார்.

எனினும், அஸலங்கவால் இனிங்ஸை நகர்த்திய இலங்கை, 65 (68) ஓட்டங்களுடன் அவரை புவ்னேஷ்வர் குமாரிடம் இழந்தது. அடுத்து வந்த துஷ்மந்த சமீரவும் புவ்னேஷ்வர் குமாரிடம் வீழ்ந்தபோதும், சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 44 (33) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை இலங்கை பெற்றது.

பதிலுக்கு, 276 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஆரம்பத்திலேயே பிறித்திவி ஷா, இஷன் கிஷனை ஹஸரங்க, ராஜிதவிடம் இழந்தது. பின்னர் அணித்தலைவர் ஷீகர் தவானை 29 (38) ஓட்டங்களுடன் ஹஸரங்கவிடம் இழந்த இந்தியா, மனிஷ் பாண்டேயை 37 (31) ஓட்டங்களுடன் ரண் அவுட் முறையில் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் இழந்ததுடன், அடுத்து  வந்த ஹர்டிக் பாண்டியாவையும் தசுன் ஷானகவிடம் உடனே பறிகொடுத்தது.

இதையடுத்து சூரியகுமார் யாதவ்வும், குருனால் பாண்டியாவும் இந்தியாவின் இனிங்ஸை மீளக் கட்டியெழுப்பிய நிலையில், 53 (44) ஓட்டங்களுடன் சூரியகுமார் யாதவ்வையும், 35 (54) ஓட்டங்களுடன் குருனால் பாண்டியாவையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் லக்ஷன் சந்தகான், ஹஸரங்கவிடம் இந்தியா இழந்திருந்தது.

எவ்வாறாயினும், புவ்னேஷ்வர் குமாரின் இணைப்பில், தீபக் சஹர் பெற்ற ஆட்டமிழக்காத 69 (82) ஓட்டங்களுடன், 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை இந்தியா அடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக தீபக் சஹர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X