2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கயிறு கொடுத்தார் காதல் மன்னனின் பேத்தி

Ilango Bharathy   / 2023 மார்ச் 28 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவ  கற்கையை மேற்கொள்வதற்கான அனுமதியைப்  பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டில் நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி அபர்ணாவைப்  பொலிஸார் தேடி வருகின்றனர்.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஜெமினி கணேசனின் பேரன் ‘அபிநய்‘. இவரது மனைவி அபர்ணா சொந்தமாக ஆடையகமொன்றை நடத்தி வந்துள்ளார்.

குறித்த ஆடையகத்திற்கு ‘மஞ்சு‘ என்ற ஆடை வடிவமைப்பாளர் நீண்ட காலமாக  ஆடைகளை வடிவமைத்து  விநியோகம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் 12ஆம்  தரத்தை முடித்துவிட்டு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எனினும் அவர் விரும்பக்கூடிய கல்லூரி கிடைக்காத விடயத்தை கேள்விப்பட்ட அபர்ணா, பிரபல மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என்றும் மஞ்சுவிடம் கூறியுள்ளார்.

மேலும் ”முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ  கல்லூரியை உறுதி செய்து கொள்ளலாம் எனவும் மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை, அவர் கூறியபடி, அபர்ணாவின் நண்பரான அஜய்யின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, ஐந்து நாட்கள் கழித்து வட்ஸ் அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக கூறி போலி சான்றிதழ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சான்றிதழை எடுத்துக்கொண்டு அந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்று, மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றுள்ளார். அது போலியான சான்றிதழ் என்று கல்லூரி நிர்வாகத்தினர் மஞ்சுவிடம் கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கொடுத்த பணத்தை கேட்டு அபர்ணா வைத்திருக்கும் நவீன ஆடையகம் சென்றுள்ளார்.

அப்போது 5 லட்ச ரூபாய் பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்குதான் அனுப்பியதாகவும், தனது நண்பரிடம் சென்று வாங்கிக்கொள்ளுமாறு கூறி அலைக்கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் அபர்ணா கடையை மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அபர்ணா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மஞ்சு. இதன் அடிப்படையில் அபர்ணா, நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம்பொலிஸார் , அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .