2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைரஸ் பரவலைத் தடுக்கும் செயலி அந்தரங்க உரிமைக்கு எதிரானதா?

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை, இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த செயலி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், இதில் சேகரிக்கப்படும் செல்பேசி எண், வயது, பாலினம், இருப்பிட விவரங்கள் உள்ளிட்ட தனிநபர் விவரங்கள் அதன் பயன்பாட்டாளரின் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பை உண்டாக்க நேரலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.

இந்த செயலி, அதன் செயல்பாடு, அது சேகரிக்கும் தரவுகள் குறித்த கவலைகள் உள்ளிட்டவை குறித்த 10 முக்கியத் தகவல்கள்.

1. சமஸ்கிருத மொழியில் 'உடல்நலத்திற்கான பாலம்' எனப்படும் 'ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்னும் பெயர் கொண்ட இந்த செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.

2. நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபர் இருக்கும் அதே பகுதியில் உள்ளனரா என ஆராயும்.

3. இந்த செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும்.

4. இந்த சோதனையை பயன்பாட்டாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செய்துகொள்ள முடியும். கோவிட்-19 தொற்று ஏற்பட பயன்பாட்டாளருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவ சேவையை நாட 'ஆரோக்கிய சேது' செயலி அறிவுறுத்தும்.

5. இதைப் பயன்படுத்த செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டபின், உங்கள் செல்பேசி எண்ணை இதில் பதிவு செய்ய வேண்டும்.

6. இதை பயன்படுத்துபவருக்கு தொற்று பரவியிருந்தால் அல்லது அருகில் இருக்கும் யாருக்காவது தொற்று இருந்தால் அவர்களைப் பற்றிய தகவலை இந்த செயலி அரசுக்கு தெரியப்படுத்தும்.

7. இந்தியாவில் செயல்படும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் எனும் இணையதள சேவை உரிமைகளுக்கான அமைப்பு சர்வதேச அளவிலான அந்தரங்க உரிமை விதிகளுக்கு ஏற்ப இந்த செயலி இல்லை என்று கூறுகிறது.

8. தனிநபர் குறித்த தரவுகள் இந்திய அரசின் எந்த துறை அல்லது அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என இந்த செயலியில் தெரிவிக்கப்படவில்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது.

9. ஆரோக்கிய சேது செயலியின் அந்தரங்க கொள்கைகள், பயன்பாட்டு விதிகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்ட வரையறைகள் எதுவும் இப்போது இல்லை.

10. எனவே, இப்போது நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சேகரிக்கப்படும் தரவுகள், இந்திய அரசால் வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவும் வாய்ப்புண்டு என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

இவை அல்லாமல் கூடுதலாக இன்னொரு தகவல் என்னவென்றால், 'ஆரோக்கிய சேது' செயலி மூலம் பிரதமரின் 'PM CARES' நிதிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடை வழங்க முடியும்.

மூலம்: பிபிசி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .