2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’சிவனுக்கு உகந்தது சிவராத்திரி’

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (11)  மகா சிவராத்திரி ஆகும். சிவனுக்கு சோமவாரவிரதம் முதல் திருவெம்பாவை வரை பல்வேறு விரதங்களிருப்பினும் அம்பிகை வழிபட்ட முக்கியமான விரதம்  மகாசிவராத்திரி விரதம்.

“எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்” என்று சிவபெருமான் அருளியதாக “வரதபண்டிதம்” எனும் நூல் தெரிவிக்கிறது.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால்கூட, 'லிங்கோற்பவ' காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று பல வகைப்பட்டாலும் மகா சிவராத்திரிதான் தலையாயது. மூன்று கோடி சிவராத்திரி தினங்கள் விரதம் இருந்த புண்ணியம் சிவராத்திரியில் விரதமிருந்தால் கிட்டும் என்பார்கள்.

மகேஸ்வரனைப் போற்றித் துதிக்கும் ராத்திரி சிவராத்திரி. இந்த இரவில் ஈசனைத் துதிப்பவர்களைக் கண்டு காலனும் அஞ்சுவான். ஏழ்மையும் இன்மையும் விலகி ஓடும். பகை விலகும். இருவினை நீங்கும். இறைவன் அருள் சேரும். இத்தனை சிறப்புகளையும் கொண்டதால்தான் அந்த ராத்திரி மகா சிவராத்திரி. 

கோவில்களில் 4 சாமப்பூஜைகள் நடைபெறும். அதைக் கண்டு தரிசித்து வழிபட்டால் இணையில்லாப் புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இடையிடையே சமய சொற்பொழிகள், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். நாட்டின் பிரதமரும் இவ்விரதத்தை சிறப்பாக அனுஸ்டிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆனால், கொரோனா காலமாகையால், கோவில்களில் மட்டுப்படுத்தப்பட்டளவில் பூஜைகள் நடைபெறும். எனவே, இந்துக்கள் வீட்டிலேயிருந்து விரதத்தை அனுஸ்ட்டிக்கலாம். வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து, அற்புத பலன்களைப் பெறலாம்.

4 காலத்துக்கும் தனித்தனியே சிறிய 4 ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள்களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே பெறலாம்.

மகா சிவராத்திரியில் விசேடமான 8 சிவ நாமங்கள் உச்சரித்தால் நலமுண்டாகும். மகா சிவராத்திரி தினத்தில் கீழ்க்காணும் எட்டு திருப்பெயர்களைக் கூறி துதித்தால் வாழ்வு வளமாகும்.

1. பவாய நம 2. சர்வாய நம 3. ருத்ராய நம 4. பசுபதயே நம 5. உக்ராய நம 6. மகாதேவாய நம 7. பீமாய நம 8. ஈசாநாய நம  என்பதாகும்.

இத்துணை சிறப்பு வாய்ந்த சிவராத்திரியை அனுஷ்டித்து வளம்பெறுவோமாக.

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .