2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம்

Freelancer   / 2021 ஜூலை 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை கடற்கரையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (09) கடற்றொழிலுக்காகச் சென்ற இரு மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை 07 ஆம் பிரிவினை வசிப்பிடமாகக் கொண்ட அப்துல் றசீட் றிஸ்வான் (32 வயது), வாழைச்சேனையினைப் பிறப்படமாகவும், மூதூரை வசிப்படமாகவும் கொண்ட அப்துல் காசிம் முனவ்வர் (32 வயது) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

காணாமற்போன இரு மீனவர்களும் அட்டாளைச்சேனை கப்பலடி கடற் பகுதியில் இருந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் றிஸ்வி என்பவருக்குச் சொந்தமான இயந்திரப் படகில் வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் நான்கு மணியளவில் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்களைத் தேடும் பணியில் கடற்தொழில் அமைச்சு உத்தியோகத்தர்கள், கடற்படையினர், மீனவர்கள் மற்றும் துறைசார்ந்தோர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக மாலை வேளையில் கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் காலை வேளையில் இருப்பிடம் நோக்கி திரும்பியிருக்க வேண்டும். கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதனால் இவர்களின் படகு காற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கக் கூடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு இரவுப் பொழுதில் மட்டும் ஆழ்கடலில் தரித்து நின்று மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருவதனை வழமையாக்கிக் கொண்ட இவர்கள், ஒரு நாளுக்குப் போதுமான எரிபொருள், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு சென்றுள்ளதாக இவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக கடற்கரைப் பிரதேசத்தில் பலத்த காற்று வீசி வருவதனால் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கை ஸ்தம்பித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

பலத்த காற்று வீசுவதனால் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதித்து தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .