2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

கோட்டாபய கடற்படை முகாம்; நடந்தது என்ன? (முழு விபரம்)

Ilango Bharathy   / 2021 ஜூலை 30 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து, வீதிக்குக்குக் குறுக்காக அமர்ந்திருந்தும், முகாமின் பிரதான படலையை மறித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, புலனாய்வுத் துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் பகிரங்கமாக புகைப்படங்களை எடுத்தமையால், இருதரப்பினருக்கும் இடையில் அவ்வப்போது கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றமையை அவதானிக்கமுடிந்தது.

எனினும், அங்கு மேலதிகமாக குவிக்கப்பட்டிருந்த ​படையினரும், அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினரும் பாதுகாப்பை மேலும் கடினப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.    அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

எனினும், கலந்துரையாடல் நடத்தப்படவேண்டிய நாள் தொடர்பில், நேற்றையதினம் இறுதித் தீர்மானம் எவையும் எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  கடிதம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் கோட்டாபய கற்படை முகாம் கடற்படையினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குரிய சுமார் 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக சுவீகரித்து கடற்படையினருக்கு வழங்குவது தொடர்பில், முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன், 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை, காணி உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு அனுப்பிவைத்திருந்தார்.

குறிப்பாக அக்கடிதத்திலே, கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நில அளவையானது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும், முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு, நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விவரங்களையும் இனங்காட்டும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக் குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளை, அவரவரது காணியை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும், அக்கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கடிதத்தின் அறிவிப்பை ஏற்க மறுத்த காணிகளுக்குரிய தமிழ் மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி  ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளும் முடிவுக்கும் வந்திருந்தனர்

  அச்சுறுத்திய படையினர்



அதற்கமைய, நேற்றுக்காலை 7 மணியளவில், துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணிகளுக்குரிய மக்கள் சிலர் உள்ளிட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் கோவிலுக்பு முன்பாக ஆர்ப்பாட்டத்துக்கு உரிய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் சிலர், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்ற வகையில் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்துக்கான முயற்சிகளைக் குழப்புகின்ற வகையிலும் செயற்பட்டிருந்தனர்.

  வழிமறிக்கப்பட்ட வாகனம்



நில அளவீடுகளைச் செய்வதற்காக அவணங்களுடன் காலை 9 மணிக்கு வருகைதருமாறு கடிதத்தின் மூலம் காணிக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் வழங்கியிருந்ந நில அளவைத் திணைக்களம், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் 07.30மணிக்கே நில அளவீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வட்டுவாகல் கோட்டாபய  கடற்படை முகாம் வளாகத்துக்கு வருகை தந்திருந்தனர்.

நில அளவைத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாடானது காணிகளுக்குரிய தமிழ்மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து அங்கு நில அளவீட்டிற்கென வருகைதந்திருந்த முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் தலைமையிலான குழுவினர், கடற்படை முகாமிற்குள் செல்லமுற்பட்டபோது, அவர்கள் வருகைதந்த வாகனத்தை, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் வழிமறித்தனர்.

அவர்கள் வாகனத்தை வழிமறிப்பதற்குள் வாகனத்தை விட்டிறங்கிய நில அளவையாளர் பா.நவஜீவன், கடற்படை முகாமிற்குள் சென்றிருந்தார்.

தொடர்ந்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எடுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 குவிக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பு


இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது கடற்படை முகாமின் உட்புறமாக கலகம் அடக்கும் கடற்படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர், புலனாய்வாளர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தைச் சூழ நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து, அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டிருந்தனர்.

இணக்கப்பாடு  

இவ்வாறாக தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், நிலஅளவைச் செயற்பாடுகளை நிறுத்திவைப்பது எனவும், கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்படும் வரை நிலஅளவைச் செயற்பாடுகளை நிறுத்திவைப்பது என்ற இணக்கமான கருத்தை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இணக்கமான கருத்தையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளும் முடிவுக்குவந்தனர்.

தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்



தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சீன நாட்டைச் சேர்ந்தவர், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்டஈட்டைப் பெறுவதற்கும், இதுவரை காலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்துக்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீனச் சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனக் கோஷம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனக் கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

  தனியே அழைப்புக்கு மறுப்பு

 
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி, ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக தனியே பேசவேண்டுமென, மக்கள் பிரதிநிகளான சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரை, பொலிஸார் கடற்படை முகாமுக்குள் அழைத்தனர்.

பொலிஸாரின் இந்த அழைப்பை ஏற்கமறுத்த மக்கள் பிரதிநிதிகள், எதைத் தெரிவிப்பதாக இருந்தாலும் மக்களுக்கு முன் வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு தெரிவித்திருந்தனர்.

  வெளியே அழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்



அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன், கடற்படை முகாமிற்குள் இருந்த நிலையில் அவரை வெளியே வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைத்தனர்.

அதற்கு குறித்த நில அளவையாளர், தனக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாக்குவார்களோ என்ற அச்சம் இருப்பதாத் தெரிவித்து வெளியே வருவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.

நில அளவையாளரின் கருத்தை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் தாக்கமாட்டோம் எனவும் வெளியே வந்து தமக்கு ஒரு முறையான முடிவைத் தெரிவிக்குமாறும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அழைத்தனர்.

எனினும், அவர் வெளியே வராததுடன், தாம் மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிவிட்டு வருவதாகக்கூறி, கடற்படை முகாமிற்குள்ளேயே இருந்தார்.

  விலகிச்செல்ல உத்தரவிட்ட கடற்படை

கோட்டாபய கடற்படை முகாம் பிரதான வாயில் அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகி, பிரதான வாயிலுக்கு முன்பாகவுள்ள பாதுகாப்பு தடுப்பு வேலிக்கு வெளியே செல்லுமாறு கடற்படையினர் உத்தரவிட்டனர்.

அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு வெளியே செல்லமுடியாதென மறுத்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் மெதுவாக அங்கிருந்து விலகி,   வெளியேவந்தனர்.

இந்நிலையில் உட்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கலகம் அடக்கும் கடற்படையினர் வெளியே கொண்டுவரப்பட்டு, பாதுகப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தந்திரமும் சிக்கியது


ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, நில அளவைத் திணைக்களத்திலிருந்து வேறு வாகனம் ஒன்றில் நில அளவையாளர்கள் ஏற்றிவரப்பட்டு, கடற்படை முகாமின் பிறிதொரு வாயிலூடாக அவர்கள் கடற்படை முகாமிற்குள் நுழைந்து, அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த ஆர்பாட்டக்காரர்கள், நில அளவையாளர்கள் வெளியே வரவவேண்மென கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், முல்லைத்தீவுப் பிரதேச நில அளவையாளர் பா.நவஜீவனின் பெயரைக் குறிப்பிட்டு "துரோகி நவஜீவனே.. வெளியே வா.." எனக் கோஷம் எழுப்பினார்.

அத்தோடு,  பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் அமர்ந்து, சாலைமறியல் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் சில மணி நேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டிருந்தது.

 தாக்கிய பொலிஸார்

இவ்வாறு தொடர்ச்சியாக வீதிமறியலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக கடற்படைமுகாமிற்குள் அளவீடச்சென்ற முல்லைதீவு பிரதேச நிலஅளவையாளர் பா.நவஜீவன், அளவீட்டு முயற்சியைக் கைவிட்டு, கடற்படை முகாமிற்கு வெளியே வந்தார்.

இந்நிலையில் அவரின் வாகனத்தைச் சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புத் தரப்பினர் தள்ளியதுடன், தாக்கியுமிருந்தனர்.

இவ்வாறாக ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து நில அளவையாளர் பா.நவஜீவனையும் அவரின் வாகனத்தையும் மீட்ட பொலிஸார்,   புதுக்குடியிருப்பு ஊடாக, கேப்பாப்புலவு வழியே அவரை அனுப்பிவைத்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X