2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’கோட்டாவுக்கு மூளை சரியில்லை’

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மக்கள் இன்று வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள்.இப்போது இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது. பொறுப்பற்று எதேச்சதிகாரமாக செயற்பட்ட வண்ணமுள்ளார் ஜனாதிபதி. கோட்டாபய ராஜபக்ஷவின் மூளை சரியில்லை“ என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்துள்ளது. 21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட சர்வாதிகார ஆட்சியை அகற்றிவிட்டு 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருமாறு இந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி 19 ஆம் திருத்தம் மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்போம் என்று கூறினார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குப் பதிலாக 19 அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் 19 இல் இருக்கவில்லை, 22 இல் உண்டு. 

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி அமைச்சரவையை நியமிப்பது என்ற 19 இல் உள்ள ஏற்பாடு திருத்தப்பட்டுள்ளது. 19 இல் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என கூறப்பட்ட நிலையில், தற்போது 22 இல் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஜனாதிபதி கடந்த மே 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு சொன்ன கதை பொய்யானது,மக்களை தினமும் ஏமாற்றி வருகின்றார். அது மாத்திரமன்றி அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்படுகின்ற இடம் தான் அரசியலமைப்பு பேரவையாகும்.

கடந்த காலங்களில் அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் பரிந்துரைக்கும் ஏற்பாடு, நியமிப்பதில் இருந்தது. 19 இல் இதற்கான சமநிலை இருந்தது. 

சபாநாயகர்  நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என 22 இல்  கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த அரசாங்கத்தால் ஏழு பேரும் மற்ற எதிர்க்கட்சி குழுக்களுக்கு மூன்று பேருமே நியமிக்க முடியும். அப்படியானால் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியையும் விஜேதாச ராஜபக்ஸவும் இந்நாட்டு மக்களையும் ஏமாற்றி விட்டனர்.

விஜேதாஸ ராஜபக்ஷ, மகா சங்கத் தலைமை பீடங்களுக்குச சென்று பெரும் மத தலைவர்களுக்கு வழங்கியது அல்ல, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சங்கைக்குரிய மகா தேரர்களையும் இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.  ஜனாதிபதி தனது அதிகாரத்தை தனது கைகளில் தொடர்ந்து வைத்துள்ளார்.
 
இந்த ஜனாதிபதி இன்று மக்களையும் மகாநாயக்க தேரர்களையும் ஏமாற்றி வருகின்றார். அதனால் தான் சர்வ கட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு நான்கு மகா பிரிவிவேனாக்களைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினர் முன்வந்துள்ளனர்.

அதாவது கோட்டா - ரணிலின் அரசாங்கத்தை மகாநாயக்கர் நிராகரித்துள்ளார்கள்.  கோட்டா - ரணில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதையே மகாநாயக்க தேரர்கள் கூற வருகின்றனர்.

அதனால்தான் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் அறிவிப்பை மகாநாயக்க தேரர்கள் அறிக்கையாக நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்தனர். 
 
ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இந்த வேளையில் நாட்டைக் காப்பாற்ற சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு மகாநாயக்க தேரர்கள் மற்றும் பிக்குகள் முன்வைத்த முன்மொழிவிற்கு எமது உடன்பாட்டைத் தெரிவிக்கிறோம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கருத்திற் கொள்ளாத அரசாங்கமாக இருக்கிறது, வரிசையில் நின்று செத்து மடியும் காலம் வந்துவிட்டது, எண்ணெய் வரிசையில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டோர் இன்று இறந்திருக்கிறார்கள், அதற்கு இந்த அரசாங்கம் தான் காரணம். 

அரசாங்கத்தின் தவறே இது. மேலும், எரிவாயு சிலிண்டர்கள வெடித்து, ஏராளமான மக்கள் எரிவாயு வரிசையில் இறந்தனர், கோவிட் தொற்றுநோயால், பதினேழாயிரம் பேர் இறந்ததை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம், ஏனெனில் அவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி போடாததாலும், தேவைப்படும் போது நாடு முடக்கப்படாமலும்  இருந்தது. முகக்கவசம் அணியுமாறு கூறப்படவில்லை. 

இதற்கெல்லாம் கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது ஒரு மணித்தியாலத்திற்கு 4 பேர் இந்த அழுத்தத்தினால் மரணமடைவதாக ஒரு வைத்தியர் கூறுகிறார். மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் குறித்து அரசாங்கம் ஒன்றும் தெரியாதது போல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்று மக்கள் வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவின் மூளை சரியில்லை. இப்போது இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது. பொறுப்பற்று எதோச்சதிகாரமாக செயற்பட்ட வண்ணமுள்ளார் ஜனாதிபதி.

இராஜினாமா செய்யாமல் அமைச்சரவையை நீக்கிவிட்டு அதன்பின் தற்காலிக அமைச்சரவையை நியமித்து ரணில் விக்கிரமசிங்கவை வைத்து வேறு கூடாரம் போட்டார். அண்மையில் அந்த அமைச்சரவையில் தம்மிக்க பெரேரா என்ற வர்த்தகர் இடம் பெற்றுள்ளார். 

இந்த அரசாங்கம் வரிச்சலுகை வழங்கியதால், கையிருப்பில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதாயிற்று, இந்த வரிச்சலுகைகளால், நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. வரிச் சலுகைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 700 மில்லியன் தேசிய வருமானத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இந்த வரிச்சலுகைகளில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் 3,000 மில்லியன் வரிச் சலுகையை தம்மிக்க பெரேராவே பெற்றுள்ளார் என்று நான் கூறுகிறேன்.
 
இன்று நாட்டு மக்களிடம் பாவனைக்கேற்ற போதிய எண்ணெய் இல்லை, பொருட்களின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது, ஆனால் இதையெல்லாம் மக்களே அநுபவிக்க நேரிட்டுள்ளது. 

ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதை, ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள்  வழங்கப்படுவதில்லை. ஊடக சுதந்திரம் மறைமுகமாக நசுக்கப்படுவது ஏன்? பெருந்தொகையான சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே. 

மேலும், சமூக ஊடகங்களை முடக்க அரசாங்கம் தலையிட்டால் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராடுவது மட்டுமன்றி சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு கைது செய்யப்படும் பட்சத்தில் உரிய சட்ட உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளோம்.

இன்றைய அரசால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை, எனவே சர்வ கட்சி அரசை நிறுவி பல கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பயணத்தை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியாக இன்று முன்வந்துள்ளோம். 

ஜப்பான் தூதுவர் இந்நாட்டுக்கு உதவிகளை வழங்கமாட்டோம் என்றார்.ஆனால் இந்த நாட்டுக்கு உதவிகளை வழங்குவது எமக்கு பிரச்சினை என ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார். ரணில் பிரதமார வந்த பிறகு எந்த நாட்டிலிருந்து உதவிகள் கிடைத்தன என கேட்கிறோம்.

இன்று இந்த அரசாங்கத்தில் உள்ள ராஜபக்ஷ ரணில் அரசாங்கத்தை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை. சர்வ கட்சி அரசை நிறுவி சர்வதேச நம்பகத்தன்மை ஏற்படுத்தி உதவிகளை பெறும் நடவடிக்கைக்கு செல்லாம். ஜனாதிபதி பதவி விலகி சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதே சிறந்த தீர்வாகும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .