2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டமா அதிபருக்கு நோட்டீஸ்

Freelancer   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணை முறி ஏலத்தின் போது அரசுக்கு 1,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்ட விவகாரத்தில், தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு கோரி, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த நீதிப் பேராணை (ரிட்) மனு தொடர்பாக எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த ரிட் மனு, இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இந்த மனுவை பரிசீலிப்பதற்கான தினமும் நிர்ணயிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட பிணை முறி ஏலத்தின் பொது அரசுக்கு 1,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில், சட்டமா அதிபரால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு கோரி ரவி கருணாநாயக்க, ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், சட்டமா அதிபர், பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தமக்கு எதிராக அதிகுற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ள போதும், அந்த ஆணைக்குழுவால் அத்தகைய பரிந்துரை எதுவும் செய்யப்படவில்லை என மனுதாரர் ரவி கருணாநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அவ்வாறான அதி குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும் தமக்கு எதிரான அதி குற்றப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .