2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’வடக்கு மீனவர்களின் பாதிப்புகள் புரிகின்றன’

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதாகத் தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளால், இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் தன்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும்,அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இன்று (13),  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே,  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில் முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டின் அவசியம் தொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் சுப்பிரமணியன் சுவாமிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

 இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் தன்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமி, கடல் வளங்களை அழிக்கின்ற றோலர் தொழில் முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக இந்திய மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளதாகவும் இந்திய தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி, இதற்கு விரைவான தீர்வொன்றை எடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் இரண்டு நாடுகளும் தொடர்புபட்ட சமகால நிலைவரங்கள் தொடர்பாகவும் இரண்டு நாட்டு அரசியல் முக்கியஸ்தர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .