2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வடக்கில் மும்முரம் காட்டிய மக்கள்

Niroshini   / 2021 ஜூன் 21 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், சுப்பிரமணியம் பாஸ்கரன், க. அகரன், செ.கீதாஞ்சன், றொசேரியன் லெம்பட்

நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டிருந்த பணயக் கட்டுப்பாடு, இன்று (21) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில், மதுபான கொள்வனவிலும் வங்கி சேவைகளை பெற்றிக்கொள்வதிலுமே, அதிகளவான மக்கள் ஆர்வம் காட்டியிருந்தனர்.

வவுனியா:

வவுனியா நகரில், அத்தியாவசிய உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள், வங்கிகள், மதுபான நிலையங்கள் உட்பட அனைத்து வியாபாரநிலையங்களும், இன்று (21) திறந்திருந்த நிலையில், வவுனியா நகருக்குள் நுழையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மக்கள் தமது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அடைவு வைக்கும் நிலையங்களில் அதிகமாக காணப்பட்டனர்.

இதேவேளை, வவுனியாவிலிருந்து தனியார் மற்றும் அரச பஸ் சேவைகள், வடக்கு மாகாண ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மதுபான நிலையங்களின் முன்பாகவும் அதிக கூட்டம் கூடியிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

முல்லைத்தீவு:

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுடுட்டான்,மாங்குளம், மல்லாவி, விசுவமடு ஆகிய பிரதேசங்களின் நகர்பகுதிகளில் உள்ள வங்கிகளிலும் நகை அடைகுவைக்கும் கடைகளிலும், மக்கள் அதிகளவில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

வணிக நிலையங்கள், சந்தை வியாபாரிகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், மக்களின் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி:

கிளிநொச்சியில், வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சேவைகளை பெற்றுக்கொண்டனர்.

அத்துடன்,  நகரில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

யாழ்ப்பாணம்:

யாழ். நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள், மும்முரமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக மதுபான விற்பனை நிலையங்களில் அதிகமான நபர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிந்தது.

மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரனமாக, சுகாதார நடைமுறைகளை கண்காணிப்பதற்காக, பொலிஸாரும் இராணுவத்தினரும்  கடமையில் ஈடுபட்டனர்.

மன்னார்:

மன்னார் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்த போதும், மக்களின் நடமாட்டங்கள் குறைவாக காணப்பட ன. இருப்பினும், மன்னாரில் உள்ள மது விற்பனை நிலையமும் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் சுகாதார நடைமுறைகளை மீறி மதுபான போத்தல்களை கொள்வனவு செய்ய கூடினர்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார். சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக, மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் இடம்பெற்ன.

நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானப் போத்தல்களை கொள்வனவு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X