2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களுக்கு வீடு: சிவசக்தி ஆனந்தன்

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் நவரத்தினம் கபில்நாத்

வடக்கில் பெரும்பான்மையினரின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை(19) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவிட்குட்பட்ட கொண்டச்சி பாசித்தென்றல் கடற்கரையோரம் சிங்களக் குடும்பங்களுக்காக வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நிரந்தரமாக வாழ்ந்து வந்த முள்ளிக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த தமிழ் மக்களின் வீடுகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காடுகளுக்குள் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாசித்தென்றல் கிராமத்தில்  கொக்குப்படையான் தொடக்கம் ஆலம்வில் வரையான பகுதியில் 1218 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் முதற் கட்டமாக 500 வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இதற்கென ஜனாதிபதி விசேட செயலணியினால் 560 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளியார் எவரும் சென்று பார்வையிடக்கூட முடியாத நிலையில் முழுமையான இராணுவத்தினரே அனைத்து கட்டுமாண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

போக்குவரத்துக்கான வீதி, நீர் விநியோகம், வீட்டுத்திட்டம் உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்து அரசியல் செய்துவரும் அரசு தமிழ் மக்களை திட்டமிட்டு ஒதுக்கி அவர்கள் அவல வாழ்வு வாழ்வதற்கான சூழலையே முன்னெடுத்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியினை சுட்டிக்காட்டலாம்.

இதேவேளை குறித்த பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றத்தினை முழுமையாக முன்னெடுக்கும் பட்சத்தில் அங்கு குடியேறும் 4300 சிங்கள வாக்காளர்களை எதிர்கால அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தும் உள்நோக்கமும் உணரப்பட்டுள்ளது.

இவ்வாறான அடாவடித் தனமான நில ஆக்கிரமிப்பும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றமும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை உடனடியாகக் கைவிட்டு தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து அவர்களும் சராசரி மனிதர்களாக வாழ்வதற்கான நடவடிக்கைகளையாவது முன்னெடுக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்' என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X