2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு புதிய சிந்தனை அவசியம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


பூமியும் தனியொரு பேருயிர்தான். இதைப் புரிந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பாட நூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியமென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

'வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம்' கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  கடைப்பிடிக்கப்பட்டது.  கல்லூரி அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாக பிரித்துப் படிப்பதால், பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறி வருகிறோம்.

எமது பாடங்கள் காற்று, கடல்நீர்,  பூமியினுள்ளே கொதிக்கும் கற்குளம்பு, தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பற்றி தனித்தனியாக போதிப்பதால், பூமியை உயிரற்ற ஒரு பிண்டமாகவே கருதுகிறோம் அல்லது உயிரினங்கள் வாழ்வதால் உயிர்க்கிரகம் என்று சொல்கிறோம். ஆனால், பூமியே தனித்த ஒரு பேருயிர்தான். இதைப் புரிந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பாட நூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியம்.

எமது உடல் வெப்பநிலையை மாறாது சீராக நாம் வைத்திருக்கிறோம். எமது இரத்தத்தில் குளுக்கோசின் செறிவை மாறாது பேணுகிறோம். இவ்வாறு எமது உடற்தொழிற்பாடுகள் சமநிலையில் இயங்குவதால்தான்; நாங்கள்; எங்களை உயிர் என்கிறோம்.

எங்களைப் போன்றே பூமியும் தனது மேற்பரப்பின் வெப்பநிலையை மாறாது பேணிவருகிறது. காற்றில் கரிய அமில வாயுவின் செறிவை, கடல் நீரில் உப்பின் செறிவையெல்லாம் கூடவோ, குறையவோவிடாது பேணிவருகிறது. இவ்வாறு தன்னைச் சமநிலையில் வைத்திருக்கும் எண்ணற்ற செயற்பாடுகளில் பூமி இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பதால், பூமியை ஒரு பேருயிராகக் கருதும் புதிய சூழலியல் சிந்தனைப்போக்கு வளர ஆரம்பித்திருக்கிறது. இதன் அடிப்படையில் மேற்கின் தத்துவவியலாளர்கள் பூமியை கயா என்ற கிரேக்கப் பெண் தெய்வத்தின் பெயரால் அழைக்கத் தொடங்கியுள்ளனர். நமது தமிழ் மரபிலும்  பூமியை பூமாதேவி, புவியன்னை என அழைக்கப்படுகின்றது.

பூமி என்ற பேருயிரில் குடியிருக்கின்ற எங்களுக்கும் பூமிக்கும் இடையிலான உறவு பன்னெடுங்காலமாக பரஸ்பரம் கொடுத்து வாங்கும் உறவு முறையாகவே இருந்தது. எங்களுக்கும் எங்களது உணவுக்குழாயில் குடித்தனம் செய்யும் இ.கோலி பக்ரீறியங்களுக்கும் இடையிலிருக்கும் ஒன்றுக்கொன்று நன்மை செய்யும் ஒன்றியவாழி உறவைப் போன்றே நீடித்தது. ஆனால், நாம் இன்று பில்லியன் கணக்கில் பல்கிப் பெருகி, நுகர்வு வெறி தலைக்கேறிப் பூமியின் இழையங்களைச் சிதைக்கும் ஒட்டுண்ணிகளாகவல்லவா மாறிவிட்டிருக்கிறோம்.

எங்களில் தொற்றி ஒட்டுண்ணிகளாக வாழ முயற்சிக்கின்ற கிருமிகளை எமது உடலின் நோய் எதிர்ப்புப் பொறி முறை தாக்கி அழிக்கின்றது. அதேபோன்றே, பூமி என்னும் பேருயிரும் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டிருக்கும் எங்களை அழிப்பது தவிர்க்க முடியாதது. இப்போது அடிக்கடி அரங்கேறிவரும் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் எங்களை அழிப்பற்கான அல்லது சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான பூமியின் தற்காப்புப் பொறிமுறைகள்தான். நாங்கள் மீளவும் பூமியுடன் கொடுத்துவாங்கும் உறவு முறைக்குத் திரும்புவதே எங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி, பூமியையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழிமுறையாகும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X