2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழர் உரிமை விடயத்தில் சரியான முடிவுகளையே எடுக்கிறோம்: வினோ எம்.பி

Menaka Mookandi   / 2014 ஜூன் 15 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்ற போதிலும் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் கூட்டமைப்பு சரியான நேரத்தில் சரியான முடிவுகளையே மேற்கொண்டு வருவதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

மன்னார், பாப்பாமோட்டை கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், சனிக்கிழமை (14), பாப்பாமோட்டை பொது மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் சரியான நேரத்தில் மக்களின் உரிமைகள் தொடர்பில் சரியான முடிவுகளை நாம் எடுத்து வருகின்றோம்' என்றார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, மக்களின் விடுதலை போன்றவற்றிற்கு நாம் முன்னுரிமை வழங்கி வருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாங்கள் கூட்டாக செயற்பட்டு சரியான முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில் எங்களில் யாரும் குற்றம் காண முடியாது. எமது உரிமைகளும் பரிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அஞ்சவில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வருகின்றனர்.

அந்த வகையிலே மாகாண சபையினை நாம் கைப்பற்றியுள்ளோம். மாகாண சபைக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்களை வைத்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண முயற்சிக்கின்றோம்' என்றார்.

தேர்தல் காலங்களில் மாத்திரமே வாக்குகளுக்காக வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் ஆதங்கங்களை எம்மால் புறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. எங்களினால் அபிவிருத்தி, வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாது. அரசாங்கத்ததை எதிர்த்து நிற்கும் நாங்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது.

எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கலந்து கொண்ட மக்கள் தமது பிரச்சினைகளையும் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X