2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் ஆயருடன் தமிழர் முன்னேற்றக் கழக பிரதிநிதிகள் சந்திப்பு

A.P.Mathan   / 2015 ஜனவரி 26 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் முன்னேற்றக் கழகம், கடந்த 21ஆம் திகதியன்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப் அவர்களுடன் தமிழ் மக்களின் கலை, கலாசார, அரசியல் மற்றும் வாழ்வாதார உரிமைகள் பற்றிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தது.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளர் வி.ஜனகன் அவர்களால் ஆயர் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், இக் கலந்துரையாடலில் பிரதானமாக இரண்டு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. முதலாவதாக போருக்குப் பின்னரான குறித்த 5 வருட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம், மனோநிலை என்பன மீள் கட்டி எழுப்ப பட வேண்டியதாகும். அனால் குறித்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நலத் திட்டங்களோ. விழிப்புணர்வு நடவடிக்கைகளோ இதுவரையில் குறித்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

தமிழர் முன்னேற்றக் கழகமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற போரினால் பாதிப்படைந்த பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமங்கள் தோறும் சென்று அவ் மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடி, அவ் மக்கள் எப்போதும் பிறரின் உதவியினை எதிர்பார்த்து கையேந்தும் நிலைமையிலிருந்து மீட்சியடைந்து, தங்களைத் தாங்களே சுயமாக முன்னேற்றிக் கொள்வதன் மூலமாக நல்லதொரு முன்னேற்றத்தை அடையக் கூடிய திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, அவற்றைத் தொடர்ச்சியாக செயற்படுத்த குறித்த கிராமங்களில் கிராமிய அமைப்பொன்றை உருவாக்கி, அவ்வூரில் உள்ள மக்களையே அதன் செயற்பாட்டாளர்களாக நியமித்து, அவர்களின் மேம்பாட்டுக்காக கை கொடுத்து வருகின்றது.

மேலும், குறித்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு கை கொடுப்பதன் மூலம், அவ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம், இதனடிப்படையில் 100,000 மாணவர்களின் கல்விக்கு கைகொடுப்போம் என்ற தமிழர் முன்னேற்றக் கழகத்தின் 2015ஆம் ஆண்டின் கருத்திட்டத்திற்கமைவாக, குறித்த மாவட்டங்களில் உள்ள 2,500 மாணவர்களிற்கு அப்பியாசக் கொப்பிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.

தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்திட்டங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடுகையில், அண்மையில் தைப்பொங்கல் தினத்தன்று (15-01-2015) அன்று வெலிக்கடை, வெலிக்கடை -மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்ததோடு, அவர்களின் விடுதலை தொடர்பாக பிரதான அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் சந்திரரத்தின பள்ளேகம உட்பட்ட முக்கியமான அலுவலர்களிடம், கைதிகளின் விடுதலை தொடர்பில் இரு கோரிக்கைகளை முன் வைத்திருந்தது. முதலாவதாக அரசியலமைப்பின் உறுப்புரை 34 இன் பிரகாரம் பொது மன்னிப்பு அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி ஒரு வருடத்திற்குட்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கையின் மூலமாக குறித்த கைதிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தீர்வொன்றை குறித்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பதனை உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக ஆயர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு குறித்த கைதிகளின் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதோடு தமிழர் முன்னேற்றக் கழகமானது குறித்த கைதிகள் தொடர்பாக எடுத்துள்ள, எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஒரு விசேட கையேடு ஒன்றும் ஆயர் அவர்களிடம் வி.ஜனகன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் ஆயர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் பகிரங்கமாக குரல் கொடுத்ததாகவும், தொடர்ச்சியாக தான் அதனைச் செய்யவுள்ளதாகவும், தன்னாலான பாரிய பங்களிப்பு தமிழர் முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளில் பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு தமிழர்களுக்கான உரிமைகளையும் உதவிகளையும் பெற்றுகொள்ள அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அமைப்பொன்று காலத்தின் தேவையாகவுள்ள தென்றும், குறித்த மக்களின் பிரச்சினை, தேவைகள் தொடர்பாக மற்றைய பிரதேசங்களில் உள்ள மக்களிடமும் அரசாங்கத்திடமும் சர்வதேச அரங்கில் வேறு மொழி பேசும் மக்களிடமோ குறித்த விடயங்களை சரியாகத் தெளிவுபடுத்த சரியான தலைவரொருவர் குறித்த மக்களுக்கு இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய ஆதங்கத்தினையும், அப்படியானதொரு தலைவர் காலத்தின் தேவையெனவும் ஆயர் அவர்கள் தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளரிடம் தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக உரிய தரப்பினருக்கும் மக்களுக்கும் இடையில் சந்திப்புகளை மேற்கொண்டு தெளிவுபடுத்தவுள்ளதோடு, தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமூக நல செயற்பாடுகளுக்கும் தனது ஒத்துழைப்பினையும் ஆசிர்வாதத்தினையும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X