2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது வெட்கக்கேடானது’

Niroshini   / 2021 ஜூலை 20 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காக குரல் கொடுப்பதற்கு வடக்கு - கிழக்கில்  பெண் பிரதிநிதித்துவம் இல்லை என்பதானது வெட்கக்கேடான விடயமாகும் என,  வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி ஊடக அமையத்தில், இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்ந அவர், வடக்கு - கிழக்கில் இன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்று நீண்டு செல்கின்றன எனவும் குறிப்பாக இறுதி யுத்தம் இடம்பெற்றபோது பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக சர்வதேசத்திடம் நீதி கோரியிருந்தோம் எனவும் ஆனால் அதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

அன்று அவர்களுக்கான தண்டனை கிடைத்திருந்தால், இன்று சிறுவர் , பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், சித்திரைவதைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்காது என்றும், அவர் தெரிவித்தார்.


இதேவேளை, "அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி தொடர்பில் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது உடற்கூற்று பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றது. அந்த அறிக்கைக்காகவே நாங்களும் காத்திருக்கின்றோம்.

அந்த அறிக்கை கிடைத்த பின்னர்தான் குறித்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எம்மால் அறிய முடியும். எனினும் சிறுவர் தொழிலாளியான குறித்த சிறுமியை அமைச்சர் வேலைக்கு அமர்த்தப்பட்டதும், அவரது பெற்றோரின் வீட்டுக்கு செல்ல விடாதும், தொடர்பை ஏற்படுத்தாது வைத்திருந்தமையானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.

இது போன்று மேலும் அரசியல்வாதிகள் வீடுகளிலு்ம, அதிகாரிகள் வீடுகளிலும் சிறுவர்கள் வேலைகளிற்காக அமர்த்தப்பட்டிருப்பார்கள் எனில் அது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்" என்றும் அனந்தி குறிப்பிட்டார்.

 அத்துடன், வடக்கு - கிழக்கில் போட்டியிட்ட கட்சிகளிலிருந்து எந்தவொரு பெண் பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்துக்கு கிடைக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் தேசியப்பட்டியல் ஊடாகக்கூட நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தால், சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் குரல் கொடுத்திருக்க முடியும் என்பதுடன், இறுக்கமான சட்டங்களையும் கொண்டுவந்திருக்க முடியும் என்றார்.

"நாட்டில், பெண்கள் விவகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை. துஷ்பிரயோகங்களையும், வன்முறைகளையும் பிரயோகிக்கின்றவர்களாக ஆண்களாகவே உள்ள நிலையில், ஆணொருவரே அதற்கு அமைச்சராக இருப்பது இறுக்கமான சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது அதற்கெதிராக குரல் கொடுக்கவோ அக்கறை காட்டமாட்டார்கள்" என்றும் அனந்தி சசிதரன்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .