2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மாகாணசபைத் தினங்களில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் வேண்டாம்'

Suganthini Ratnam   / 2017 ஜூலை 13 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணசபை அமர்வு நடைபெறும் தினங்களில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்; நடத்துவதை நிறுத்துமாறு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'கிழக்கு மாகாணசபை அமர்வு, இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முதல் நாளான 17ஆம் திகதி, கிழக்கு மாகாண அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. அத்தினங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், பொத்துவில் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின்; இணைத் தலைவர்களாக பிரதியமைச்சர்  பைஸால் காஸீமும்; மாகாணசபையின்  எதிர்க்கட்சித் தலைவராகிய நானும்  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளோம்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களின் இம்மாதத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கான திகதி, கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, எமது சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தாமல், கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது, இக்கூட்டங்களுக்கான திகதியைப் பிரதியமைச்சர் பைஸால் காஸீமின் இணைப்புச் செயலாளர் மாற்றம் செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவின்  இணைத் தலைவரான என்னுடன் எவ்வித கலந்துரையாடலும் செய்யப்படவில்லை.

குறிப்பாக, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை அமர்வுகள் நடைபெறும் தினங்களைக்  கருத்திற்கொண்டே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான திகதி தீர்மானிக்கப்படுகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .