2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘குண்டர் சட்டத்தை பயன்படுத்தியமை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது’

Editorial   / 2017 மே 31 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றமை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர், நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவு நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி, வணக்கம் தெரிவித்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, டைசன், இளவழகன், அருண்குமார் ஆகியோரை, தமிழக அரசாங்கம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை, அடக்குமுறைப் பிரயோகத்தின் உச்சமாகும். இது கண்டனத்துக்குரியது. கடந்த பல ஆண்டுகளில், இத்தகு நிகழ்ச்சிகள் நடத்தப்பட அனுமதி தந்தது எப்படி?”

“ஈழத் தமிழர்களுக்காக கசிந்து, கண்ணீர் சிந்தி, பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட, மறைந்த முதலமைச்சரும் அ.தி.மு.கவின்
பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் அரசாங்கம் என்று கூறிக்கொண்டுள்ள அ.தி.மு.க
அரசாங்கம், இப்படியோர் எதேச்சாதிகாரமான தோரணையில், ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல.

“அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மீதும் இதுபோன்ற அறப்போராளிகள் மீதும், குண்டர் சட்டம் ஏவுவது, சட்ட துஷ்பிரயோகம் என்பதில் ஐயமில்லை. சட்டத்தின் தலைப்பே குண்டர் சட்டம். அப்படி இருக்கையில், இப்படி அதீதமாகப் பயன்படுத்துவது, தவறான நடவடிக்கை. உச்சநீதிமன்றம், இதுபற்றி சில முக்கிய தீர்ப்புகளைத் தந்து, குண்டர் சட்டம் என்ற ரவுடிகளை அடக்கப் போடப்பட்ட சட்டத்தை, ஓர் அரசாங்கம், தனக்கு எதிராக அரசியல் விமர்சனம் செய்பவர்களையும் போராளிகளையும் இச்சட்டத்தின்கீழ் தண்டிப்பது, எவ்வகையிலும் சட்டப்படியும், நீதிப்படியும் உரியதல்ல என்று தெரிவித்துள்ளது.

“சட்டம் மீறுபவர்களை, உரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முன்வரட்டும், அதை விடுத்து, நாட்டில் எத்தனையோ சமூக விரோதிகள் சுதந்திரமாக திரிவதும், அதேநேரத்தில் இப்படிப்பட்ட அறப்போராளிகள்மீது, அச்சட்டம் பாய்வதும், நியாயப்படுத்த முடியாத அநியாயம்!

“எனவே, நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் இச்செயலைக் கண்டித்து ஆணைகளையும் தீர்ப்புகளையும் வழங்குவதற்கு முன்பே, விடுதலை செய்தால், தமிழக அ.தி.மு.க, தனது கௌரவத்தை நிலைநாட்டிட உதவும். எனவே, அவர்களை உடனே விடுதலை செய்வதே சாலச்சிறந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .