2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சர்வதேச உதவியை நாடுவதே முஸ்லிம்களுக்கு வழி’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 மே 28 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய  தேவைப்பாடு எழுந்துள்ளது எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

தற்போது முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவது மாத்திரமே எனத் தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச தூதுவராலய உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் தமது பிரச்சினைகளை முஸ்லிம்கள் முன்வைக்க முடியும் எனவும் கூறினார்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும்; செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரபு லீக் ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்தபோது,'இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இனவாதச் செயற்பாடுகள், அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

'கடந்த ஆட்சிக்காலத்தில் பொது பல சேனா அமைப்பானது முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் அவர்களின்  இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுகளை நிறுத்துவதற்கோ அல்லது தட்டிக்கேட்பதற்கோ அந்த அரசாங்கம் முன்வரவில்லை  என்பது அனைவரும் அறிந்ததே.

'இவ்வாறான நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டதன் காரணமாக இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மிகவும் நம்பிக்கையுடன் எம்மால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி மாற்றத்தில், முஸ்லிம்கள்; நம்பிக்கை இழக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

'நாட்டில் காணப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதியில் முழுமையாக நம்பிக்கை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்களுக்குப் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால், தற்போது முஸ்லிம்கள் புறந்தள்ளப்பட்டு, அவர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

'கடந்த 30 வருடகால யுத்தத்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்குள் தமக்கான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழ் மக்கள் மீது மிகவும் மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட நடவடிக்கையானது,  இந்த நாட்டில் மிகப்பெரிய கோர யுத்தத்துக்கு வழிவகுத்தது.

'தற்போது தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை  நாடியுள்ளனர். அவ்வாறே, தற்போது முஸ்லிம்களுக்கும் உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச சமூகத்;தின் உதவியை நாடுவதாகும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .