2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’தம்பி விரல் காட்டினால் திலகருக்கு ரோஜாதான்’

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சராக இருந்துக் கொண்டு சாதிக்க முடியாதவற்றை, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி,  தன்னுடைய ஆள்காட்டி விரலை அசைத்தாலே  சாதித்துவிடுவார் என்பது, உலகமறிந்த  விடயமாகும். அவ்வாறு அவர் விரல் அசைத்தால், திலகர் எம்.பிக்கும் ரோஜா பூ கிடைக்கும் என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

“காதல் ரோஜாவே பாட்டுப்பாடி, கைதட்டி மகிழ்ந்தவர்கள், அடுத்த அமைச்சரவை திருத்தத்தின் போதேனும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். அதுவும் கிடைக்கவில்லை” என்று, திலகர் எம்.பி, ஊடகங்களுக்கு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில், இ.தொ.கா அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மல்லிகைப்பூ சந்தியில் மலர்ந்த கலைஞன் என்றும் ஆக்க, இலக்கியப் படைப்பாளி என்றும், இன்னும் ஏதேதோ துறையில் தான் ஒரு ஜாம்பவான் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மல்லியப்பூ சந்தி திலகர், காதல் ரோஜா கனவு பலிக்காது என்று கூறி கலையை கொச்சைப் படுத்துகின்றாரா? அல்லது  தனது கனவு பலிக்காது என்று நினைக்கின்றாரா? யார் இந்த திலகர்?  நேற்றுவரை தம்பி, இன்றுதான் எம்.பி.

ஓர்  இமயத்தைப் பார்த்து எந்த வகையிலும் பொறாமை கொள்வது முறையன்று. ஆறுமுகன் தொண்டமான் எம்.பி அன்றும் இன்றும் என்றும் அடைக்கலம் தேவைப்படுபவர்களுக்கு அமைச்சர். இதனைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு சகோதர மொழியின் ஆளுமையையும் கூற்றையும், குரலையும் கொச்சைப்படுத்துவது, திலகரின் அறியாமையை எடுத்துக்காட்டுகின்றது.  

எமது தலைவர் எதனையும் நிதானித்து செயற்படுபவர், மிக சாதூரியமாக பேசக்கூடிய தன்மை அவருக்குண்டு. அவர் அமைச்சுப் பதவியை தேடவில்லை. அந்த அமைச்சு, அவரைத் தேடி வரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.  

அமைச்சராக இருந்துகொண்டு சாதிக்க முடியாதவற்றை ஆள்காட்டி விரலை அசைத்தாலே, ஆறுமுகன் எம்.பியால் சாதிக்க முடியும் என்பதை திலகர் மட்டுமல்ல, இந்த உலகமே அறிந்து வைத்துள்ளது.

நினைத்ததைச் செயலாக்கும் துணிச்சல் மிக்க தலைமகன் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. 4,000 வீடுகளுக்கும் 10,000 வீடுகளுக்கும் இ.தொ.காவே சொந்தக்காரர்கள்.

ஆளுமையற்ற அமைச்சர்கள் மேடைகளில் அறிவிப்பாளர்களாக தோன்றும் புதிய காட்சி தற்போது மலையகத்தில் உலா வருகின்றது. 2020இல் ஆறுமுகன் மலையகத்தின் பிரபல அமைச்சராகுவார் என்பது சோஷியம்.   ஆனால், இன்று ஆஷியமாகப் பேசி முடித்த திலகருக்கு மீண்டும் ஒரு ரோஜாவை இ.தொ.கா கொடுக்கக் காத்திருக்கின்றது. இப்போது அவர்களுக்கு பயம் பதறிக் கொண்டு வந்திருக்கும் வெகு விரைவில் அவர்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதர்ச்சி வைத்தியம் பார்க்கும்”  என்று, அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற  உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானை, பெருந்தோட்ட மக்கள் “தம்பி” என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .