2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் பேசும் பகுதிகளுக்கு முன்னுரிமை

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன், இரண்டு வருடங்கள்  நிறைவடைகின்றன. அதனையொட்டி, ‘நிலையான அபிவிருத்தி யுகம் - மூன்றாண்டு ஆரம்பம்’ எனும் தொனிப்பொருளில் பல்வேறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில், தமிழ்பேசும் பகுதிகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.  

இதன் தேசிய வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்குப்பற்றலுடன், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறும்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.  

நாட்டின் எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில், வறுமையொழிப்பு முக்கியமானதாகும் என்றும், இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு பொறுப்பான பிரிவு அறிவித்தது.   

“நிலையான அபிவிருத்தி யுகம்- மூன்றாண்டு ஆரம்பம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டம், 2017 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்படும்.   

அதன் பின்னர், ஜனவரி 4ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்திலும், ஜனவரி 8ஆம் திகதியன்று, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்திலும், ஜனவரி 19ஆம் திகதியன்று கண்டி- குண்டசாலையிலும், ஜனவரி 25ஆம் திகதியன்று முல்லைத்தீவிலும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படும்.  

பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று அம்பாறை, அக்கரைப்பற்று, பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதியன்று ஹட்டனிலும் பல்வேறான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.   

வறுமை ஒழிப்பு எனும் தொனிப்பொருளில், 15 ஆயிரம் கிராமங்களை இனங்கண்டு, அக்கிராமங்களில் 5 ஆண்டுகளில் வறுமையை இல்லாமல் செய்வதற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும். அதற்கு அப்பால், நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக, 2,000 சிறுவர் குழுக்கள் நியமிக்கப்படும்.  

அதற்கு அப்பால், பாடசாலைத்தோட்டம் என்ற வேலைத்திட்டத்தை மீண்டும் உருவாக்கி, அதனை ஒரு கலாசாரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவையெல்லாம், அடையாள அரசியல் என்பதற்கு அப்பால், அபிவிருத்தி அரசியல் எனும் நோக்கிலேயே முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

2030ஆம் ஆண்டை நோக்கிய இந்த வேலைத்திட்டத்தில் 17 தொனிப்பொருள்களுக்கான இலக்குகள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதியன்று எழுதப்படவுள்ளது. அரசியல் நிகழ்ச்சி நிரல், அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலாக மாற்றப்பட்டு, வறுமையற்ற நாடாக மாற்றுவதற்கும் வறுமைக்கு முகங்கொடுக்கும் நாடாகவும் தயார்படுத்தல் செயற்பாடுகளும் இக்காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .