2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

13இற்கு கீழே போகவிட முடியாது: மனோ

Kanagaraj   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 ஆவது, 19 ஆவது , 20 ஆவது , 21 ஆவது , 22 ஆவது இலக்கங்களில் எமக்கு அக்கறை இல்லை. ஆனால் 13க்கு கீழே போக முடியாது. கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலே போகின்றோம் என்று இந்த அரசாங்கம் ஐ.நா சபைக்கு கொடுத்த சத்தியமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகார பகிர்வு-நல்லிணக்க போராட்ட இயக்கம் கொழும்பில் இன்று நடத்திய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பகவத்கீதை, பைபிள், திருக்குர்ஆன், தம்மபதம் ஆகிய புனித நூல்களை போன்று இன்று அரசாங்கம் அரசியல்ரீதியாக இன்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையைத்தான் பயன்படுத்துகின்றது. இந்த அறிக்கையில், இன்று இருக்கும் அதிகார பகிர்வு அமைப்பை அடிப்படையாக கொண்டு மேலே செல்ல வேண்டும் என்றும், அதை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதை எடுத்து சென்றுத்தான் மகிந்த சமரசிங்க, ஜி.எல். பீரிஸ் ஆகியோர் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் சத்தியம்  செய்து வந்தார்கள். இதில் உள்ள சிபாரிசுகளை அமுல் படுத்துவதாக சொல்லி வந்தார்கள். ஆகவே,   பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலே போக முடியுமே தவிர கீழே போக முடியாது.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் சொல்வதை போல் நாட்டை கொண்டு நடத்த முடியாது. அதிகாரத்தை பகிர்வதன் மூலம் நாட்டு பிரிவினையை தவிர்க்கலாம்ப்போம் என நாம் கூறுகிறோம்.
சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களை ஒற்றுமை படுத்துவோம் என நாம் கூறுகிறோம். 

ஆனால், இனவாதிகள் இந்த ஒற்றுமைக்கு எதிராக கூக்குரல் இடுகிறார்கள். அதிகாரத்தை பிரித்து நாட்டு பிரிவினையை தவிர்ப்பதை எதிர்க்கிறார்கள். ஆகவே, இவர்கள்தான் பிரிவினைவாதிகள். ஐக்கியத்தை ஏற்படுத்த குரல் கொடுக்கும் நாம் இந்த நாட்டின் இன ஒற்றுமையை பாதுகாக்க தேசியவாதிகள்.

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு உள்ளே போதை பொருட்கள், ஆயுதங்கள் இருக்கின்றன என இராணுவத்தையும், போலீசையும்  அனுப்பி தேடினார்கள். அதனால்தான் கலவரம் மூண்டு இன்று, 27 பேர் கொல்லப்பட்டும், 50 க்கு மேற்பட்டோர் காயப்பட்டும் உள்ளார்கள். இது அதிகாரப்பூர்வ தகவல். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் 150 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டோ, கொல்லப்பட்டோ உள்ளார்கள் என செய்தி  வெளியாகியுள்ளது.

இந்த பொருட்கள் எப்படி உள்ளே போயின? ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில், இந்திய விமானங்கள் பருப்பு கொண்டு வந்து  போட்டதுபோல், இங்கே எவராவது, விமானத்தில்  போதை பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்று போட்டார்களா?

இந்த பொருட்கள் வாயில் கதவுகள் வழியாகத்தான் போயுள்ளன. சிறைக்காவலர்கள் இந்த பொருட்களை உள்ளே கொண்டு செல்ல இடமளித்துள்ளார்கள்.  எனவே இந்த வழிமுறையை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். இந்த விடயத்தில் முதல் குற்றவாளிகள் இவர்கள்தான்.

மனித உரிமை ஆணையாளர் ஆனந்தராஜா, லண்டன் பீபீசி யில் நேற்று என்ன சொன்னார்? கடந்த மாதங்களில் இந்த சிறைச்சாலைக்கு சென்று வந்து, ஆய்வறிக்கை தயாரித்து பல சிபாரிசுகளை சிறைச்சாலை திணைக்களத்திடம் தாம் வழங்கியதாக சொல்கிறார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த சிபாரிசுகள் அமுல் செய்யப்படவில்லை. அதனால் தான் கலவரம் ஏற்பட்டு இந்த அளவுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மகிந்த சமரசிங்க, கடந்த வாரம் ஐநா சென்று என்ன சொன்னார்? இந்நாட்டில்  மனித உரிமை ஆணைக்குழு இருக்கின்றது. அது சுதந்திரமாக செயல்படுகிறது. அதன் யோசனைகளை தமது அரசு கவனத்தில் எடுப்பதாக சொன்னார். இங்கே என்ன நடந்துள்ளது?

வட-கிழக்கு பிரச்சினைகளை, தேசிய இன பிரச்சினைகளை, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குளிவின் சிபாரிசுகளை அமுல் செய்யும் பிரச்சினைகளை விடுங்கள். கொழும்பில் அமைந்துள்ள ஒரு சிறைச்சாலை சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு தருகின்ற சிபாரிசுகளைகூட உங்களால் அமுல் செய்ய முடியவில்லை.

கொலை செய்யப்பட்ட பாதாள கோஷ்டிகளை, போதை  பொருள்  வியாபாரிகளை ஊட்டி வளர்த்தவர்கள் யார் என்பது இந்நாட்டு மக்களுக்கு தெரியும். இன்று இவர்களை கொன்று போடுவதன்மூலம் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விட்டன.  இதுதான் நடந்துள்ளது.

சிறைச்சாலை சண்டை முடிந்த பின், அதிகாலையில் மீண்டும் தமது பிள்ளைகளை தேடி வந்து கூட்டி சென்று சுட்டுகொன்றுள்ளார்கள் என கொல்லப்பட்டவர்களின் சிலரது தாய், தந்தையர் சொல்கிறார்கள். இது பாரதூரமானது. இந்த குற்றச்சாட்டுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy m Wednesday, 14 November 2012 01:23 PM

    யோவ் ...என்னய்யா.. விடிய எழும்பினா பேனையும் பேப்பரும் ஆக அறிக்கை விடுவது தான் உமது வேலையா? வன்னியில கஷ்டப்படுகிற சனத்துக்கு ஏதாவது உருப்படியாக செய்யுங்கோ. அறிக்கை தொல்லை தாங்க முடியாமல் கிடக்கு. தேர்தலுக்கு இன்னும் நாள் கிடக்கு.

    Reply : 0       0

    rima Friday, 16 November 2012 02:14 PM

    ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் சிறுபான்மை மக்களின் தலைவன். இவர் யாருக்கும் வக்காலத்து வாங்க மாட்டார். இவருக்கு பதவி ஆசை இல்லை. இவர் தமிழராக இருந்தாலும் முஸ்லிம்களின் சகோதரன்... மனோ கணேசன் அண்ணா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .