2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கில் மீளக்குடியேற செல்லும் முஸ்லிம்களை ஏன் வந்தீர்கள் என கேட்கின்றார்கள்-பர்சானா ஹனீபா

Super User   / 2010 நவம்பர் 04 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

வட மாகாணத்திலிருந்து கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அங்கு செல்லும் போது ஏன் வந்தீர்கள் என சில கேட்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பர்சானா ஹனீபா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சட்டமும் சமூகமும் என்ற அமைப்பினால் வட மாகாணத்திலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட இணைப்பாளர் என்ற வகையில் கலாநிதி பர்சானா ஹனீபா ஆணைக்குழுவின் அறிக்கையை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சமர்ப்பித்து சாட்சியமளித்தார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

இந்த ஆணைக்குழுவின் முன்னால் வந்து தமிழ் சமூக தலைவர்களும் அரச அதிகாரிகளும் வட மாகாண முஸ்லிம்களை மீளக்குடியேற்ற வேண்டும் என கூறுகின்றார்கள்.

எனினும் கடந்த 20 வருடங்களாக தமிழர்கள் மாத்திரம் வட பகுதியில் வாழ்ந்ததனால், அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்று தெரியாதவர்கள் அங்கு மீளக்குடியமர செல்லும் முஸ்லிம்கள் அனுதாபம் காட்டவில்லை என அவர்கள் உணர்கின்றனர்.

வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தற்போது புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இன்று வரை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இம்மக்களின் மூலம் புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களும் நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் இன்று யாரும் பேசுவதாகவும் இல்லை. அவர்களுக்கு உதவி செய்வதாகவுமில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது 90% மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் இதில் வடமாகாண முஸ்லிம்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பலர் தாங்கள் மீண்டும் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். இவர்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்த ஆணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும்.

அத்துடன் அவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பவும், வீடுகள் கட்டிக்கொடுக்கவும் இவ்வணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும் என கலாநிதி பர்சானா ஹனீபா கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • mannin manthan Friday, 05 November 2010 03:56 PM

    நான் அறிந்த வரை முதன் முதலாக இடம் பெயர்ந்தவர்களின் அறிக்கை ஒன்றில் புத்தளம் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருப்பதாக ஒற்றை வரியில் சொல்லப்பட்டுள்ளது. திருமதி ஹனீபா போன்ற அறிவுஜீவிகளுக்கு இப்போது தானா தெரிந்துள்ளது, வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் புத்தளத்தின் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மட்டுமே குடியேறினார்கள் என்பது? கடந்த இரு தசாப்தங்களாக அவர்கள் புத்தளம் முஸ்லிம்களுடைய எல்லா உரிமைகளையும் பயன்படுத்திக்கொண்டனர்.

    Reply : 0       0

    xlntgson Monday, 08 November 2010 08:56 PM

    மண்ணின்மைந்தன் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்நாடு எல்லாருக்கும் சொந்தம் என்கிறார் ஜனாதிபதி.
    அவரவர் தத்தம் இருப்பிடத்தை விட்டு வேற்றிடங்களுக்கு காரணமில்லாமல் குடியேற மாட்டார்கள்.
    அரசு அவ்வளவு எளிதில் இலவசமாக நிலத்தை பங்கு வைத்து விடமாட்டாது. கொழும்பில் கூட கையகப்படுத்தும் காணிகளை நல்ல விலைக்கு விற்கும் திட்டம் இருக்கிறது. ஆகவே யாரோ சொல்கிறார்கள் என்பதற்கெல்லாம் தன் உரிமையை நிலை நாட்டாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு பொய்யான முறையில் குடியேற்றினால் அது தெரியாமல் போய் விடாது. எதற்கும் தைரியமாக இருக்கவேணும்.

    Reply : 0       0

    Yaalawan Murshid Friday, 12 November 2010 05:22 AM

    இங்கு மண்ணின் மைந்தன் சொன்னது, யாரும் எங்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்ற விடயத்திற்கு முரணானதல்ல. மாற்றமாக புத்தளம் முஸ்லிம்களும் கடந்த 20 வருடங்களாக பிரச்சனைகளை அனுபவித்துள்ளார்கள். அவர்களது விடயங்களை பேசுவதற்கு எந்த ஆணைக்குழுவும் இல்லை. புத்தளம் முஸ்லிம்கள் அநியாயம் செய்தார்கள் என்று சொல்லியே எத்தனையோ கலாநிதிகள் பக்கம் பக்கமாக எழுதி சம்பாத்தியம் நடாத்தி விட்டு, இன்று ஒரு வரியில்... இதைத்தான் அவர் சொல்லியுள்ளார். விளங்காதது போல் நடிக்க வேண்டாம்!

    Reply : 0       0

    xlntgson Monday, 15 November 2010 08:36 PM

    yaalawan murshid,
    முஸ்லிம்களுக்கு என்று மட்டுமே ஓர் ஆணைக்குழு ஏற்படுத்துவார்களா, உங்களது குறைபாடுகளை ஆதங்கங்களை இந்த ஆணைக் குழுவுக்கே தெரிவிக்க முடியாதா?
    இதைக்கூட அவ்வாறான ஆணைக்குழுவில் அங்கம் பெற்றிருப்பவர்களும் பார்க்கலாம் அல்லவா?
    பலன் கிடைக்காது என்று முற்கூட்டியே சொல்லிவிட்டால் அல்லது எங்களை விசேடமாக கவனிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்ல இயலும்?
    காணாமற்போனவர்கள் கண்ணீரே பெரும் கண்ணீராக இருக்கும் போது இடமாற்றம், இடப்பெயர்ச்சி இதெல்லாம் 2-ம் இடத்தை அடையும் என்பது ஆச்சரியம் இல்லை, என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .