2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாரம்பரிய கைத்தொழில் சார்ந்த தேசிய கொள்கையொன்றை வகுக்க தீர்மானம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாரம்பரிய கைத்தொழில்கள் சார்ந்த தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் அதேவேளை சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு இலகு கடன் வசதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் ஏற்பாட்டில் கண்டி, பேராதனையில் இன்று மாலை, பாரம்பரிய கைத்தொழிலாளர் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  
 
கண்டி மாவட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்களுக்குப் பெயர் பெற்ற உடுநுவர பகுதி சார்ந்த பித்தளை, வெள்ளி, தங்கம், தோற்கருவிகள் உட்பட பல்வேறு கைத்தொழில்கள் சார்ந்த உற்பத்தியாளர்களும் சிறுதொழில் முயற்சியாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களது தொழில்சார் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
 
அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், 'மூலப்பொருட்களின் தட்டுப்பாடு வெகுவிரைவில் நீக்கப்பட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் முன்னேற்றப்படும்' எனத் தெரிவித்தார்.

அத்துடன் 'அனுமதிப் பத்திரங்கள் பெறுவது முதலான சிக்கல்கள் அனைத்தும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்க்கப்படுமென்றும் அமைச்சின் நோக்கத்தின்படி சிறுதொழில் முயற்சியாளர்களது முன்னேற்றம் மத்தியதர தொழில் முயற்சியாளர்கள் வரையிலும் மத்தியதர  தொழில் முயற்சியாளர்களது முன்னேற்றம் பாரிய தொழில் முயற்சியாளர்கள் வரையிலும் முன்னேற்றப்படும்' எனவும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் உயரதிகாரிகள், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சர், அமைச்சின் செயலாளர், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .