2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தகுதி அடிப்படையில் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவாகுவதற்கு முழு அங்கத்துவ நாடுகள் எதிர்ப்பு: ஐ.சி.

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 10 அணிகள் மாத்திரம் பங்குபற்ற அனுமதிக்கப்படும் திட்டத்திற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) பூரண அங்கத்துவமுடைய 10 நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட நேர்ந்தது என ஐ.சி.சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோர்கட் தெரிவித்துள்ளார்.

பத்து அணிகளை மாத்திரம் அனுமதிப்பதென்றால்  பூரண (டெஸ்ட்) அங்கத்துவம் உடைய அணிகளும் தகுதி அடிப்படையிலேயே இச்சுற்றுப்போட்டிக்கு தெரிவாக வேண்டியிருக்கும் என்பதே பிரதான ஆட்சேபனைக்குரிய விடயமாக இருந்தது என  ஈ.எஸ்.பி.என்.- கிரிக்இன்போவுக்கு அளித்த செவ்வியில் ஹாருன் லோர்கட் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்;கிண்ண சுற்றுப்போட்டியில் 10 அணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படும் என ஐ.சி.சி. கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

ஆனால் ஜூன் மாதம் ஹொங்கொங்கில் நடைபெற்ற ஐ.சி.சி. வருடாந்த  மாநாட்டின்போது, முழு  அந்தஸ்துள்ள 10 அணிகளையும் நேரடியாகவும்  இணை அங்கத்துவம் உள்ள நாடுகளுக்கிடையில் தகுதிகாண் போட்டிகளை நடத்தி மேலும் 4 அணிகளையும் சேர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் 10 அணிகள் மாத்திரமே பங்குபற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 'அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கிடையிலும் தகுதி அடிப்படையில் 10 அணிகளை தெரிவுசெய்து போட்டிகளை நடத்துவது சிறந்த சுற்றுப்போட்டியாக அமையும் என நான் இன்னும் நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டை தந்திரோபாய ரீதியில் மறுசீரமைப்பதற்கும் மூன்று வகையான போட்டிகளையும் பாதுகாத்து ஊக்குவிப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்' எனவும் ஹாருன் லோர்கட் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .