2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிம்பாப்வேயை இலகுவாகத் தோற்கடித்தது இந்தியா

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
 
புலவாயோவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
 
ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களுடன் தடுமாறியது. 6ஆவது விக்கெட்டுக்காக 80 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், 6ஆவது விக்கெட்டாக மல்கொம் வோலர் வீழ்த்தப்பட, சிம்பாப்வே தடுமாறி வீழ்ந்தது.
 
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக எல்ற்றன் சிக்கும்புரா 66 பந்துகளில் 50 ஓட்டங்களையும், மல்கொம் வோலர் 77 பந்துகளில் 35 ஓட்டங்களையும், வியூசி சிபன்டா 45 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஷ்ரா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அறிமுக வீரர் மோகித் சர்மா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஜெய்தேவ் உனத்கட், மொஹமட் ஷமி இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
 
முதலாவது விக்கெட்டை 23 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 122 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றிபெற்றனர்.
 
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக சுரேஷ் ரெய்னா 71 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும், றோகித் சர்மா 90 பந்துகளில் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக ரென்டாய் சத்தர ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
 
இப்போட்டியின் நாயகனாக மோகித் சர்மா தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .