இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட குழுவில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்கலமாக ஓட்டங்களை பெற தினேஷ் சந்திமால் தடுமாறி வருவதே அணியில் இருந்து அவர் நீக்கபப்டக் காரணம். இங்கிலாந்தில் அவர் விளையாடிய 3 போட்டிகளில் 38 ஓட்டங்களை, மாத்திரமே பெற்று இருந்தார். இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருந்த சத்துரங்க டி சில்வா வாய்ப்புக்கள் வழங்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற நான்கு அணிகள் பங்குபற்றிய தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற விருதைப் பெற்ற உப்புல் தரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை கீத்ருவான் விதானகே மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட கௌஷால் சில்வா குழுவில் இணைக்கப்பட்டுள்ள போதும் அவர் தனது உடற் தகுதியை நிரூபித்தால் மாத்திரமே குழுவில் இடம்பிடிப்பார். உபாதை காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடாமல் இருந்த சுரங்க லக்மால் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அஞ்சலோ மத்தியூசின் தலைமையில், லஹிறு திரிமான்னே, திலகரட்ன டில்ஷான், குஷால் பெரேரா, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, கித்ருவான் விதானகே, அஷான் பிரியரஞ்சன், உப்புல் தரங்க, சசித்திர சேனநாயக்க, ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ், திசர பெரேரா, நுவான் குலசேகர, லசித் மாலிங்க, சுரங்க லக்மால் ஆகியோர் இலங்கை குழுவில் இடம் பிடித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியானது முதல் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மாத்திரமே. இம்மாதம் 6ஆம் திகதி இலங்கை தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 ஒரு நாள் சர்வதேசப் போட்டிககள் அடங்கிய தொடர் கொழும்பு பிரேமதாசா மைதனத்தில் ஆரம்பிக்கவுள்ளது.