2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'அபிவிருத்திகளை முடக்குவதால் எந்த பிரயோசனமும் இல்லை'

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்

அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் போர்க்க கொடி உயர்த்த வேண்டுமே தவிர, உள்ளூர் அரசியல்வாதிகளை முடக்கி கிடைக்கின்ற அபிவிருத்திகளைத் தடுக்கின்ற ஒரு முதலமைச்சராக இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புஸ்லாஹ் தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கத்துக்கும் வலுவூட்டலுக்குமான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியில் புலமை காட்டிய மாணவர்களைக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தலைமையில் ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை(15) இரவு இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அரசியல்வாதிகளிடத்தில் ஒரு அந்யோன்யமான ஒத்தழைப்புக் கலாசாரம் இருந்தது. அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றபோது பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் செயற்பட்டோம்.

ஆயினும், அவ்வாறான ஒரு அழகிய புரிந்துணர்வுள்ள நாகரீகம் மிக்க அரசியல் கலாசாரம் தற்போதைய  கிழக்கு மாகாண முதலமைச்சரால் சீரழிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அவரது நடவடிக்கைகள் வெறுக்கத் தக்கதாக உள்ளன என்றார்.

மேலும்,நான் தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்.ஆகையினால். நான் எல்லோருடனும் கலந்தாலோசித்துத் தான் பணிகளைச் செய்கின்றேன்.

தற்போதைய முதலமைச்சர் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றார்.அவர் காட்ட வேண்டிய அதிகாரம் இதுவல்ல.

13ஆவது சரத்திலே மாகாண சபைகளுக்கு நூற்றுக் கணக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், ஏனைய மாகாணங்களுக்கு கொடுத்திருக்கின்ற அதிகாரத்தைக்கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு கொடுக்காமல் மத்திய அரசு தட்டிப் பறித்து வைத்துள்ளது.

சட்ட ரீதியாக முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்களை ஒரு வர்த்தமானி அறிவித்தலோ அல்லது ஒரு சுற்று நிருபமோ இன்றி மத்திய அரசு கிழக்கு மாகாண சபைக்கு வழங்காது தடுத்து நிறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முதலமைச்சராக வந்த பின்னர் கூட்டு நிதியிலிருந்து மத்திய அரசாங்கத்தினால் மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபைக்கு எவ்வளவு நிதி கொண்டுவந்துள்ளீர்கள்?  இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேள்வியெழுப்பிள்ளார்.

யுத்தம் முடிவடைந்தவுடன் உருவான முதலாவது கிழக்கு மாகாணசபையில்; நானும் ஒரு அமைச்சராகவிருந்து முதலமைச்சருடன் இணைந்து சட்டங்களை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்தளித்து பல சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டுள்ளோம். அந்த காலகட்டத்தில் மாவட்டத்தில் பல அமைச்சர்கள் இருந்தார்கள் எங்களுக்குள் எந்தவித பிரச்சினைகளும் இருந்ததில்லை.
 
மாகாணசபைகளுக்கு 13ஆவது சரத்திலே வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் நீர்ப்;பாசன, சமூக தேவைக்கான அதிகாரம் போன்ற ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட கிழக்கு மாகாணத்திற்கு வழங்காமல் மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .