2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'வெளிப்படைத் தன்மையின்றி வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயங்களில் 2017ஆம் ஆண்டுக்கான  வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் வெளிப்படைத் தன்மையின்றி நடைபெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
'மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயங்களின் 2017ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் பாராபட்சமாகவும் சமத்துவமின்றியும் சிறந்த விசுவாசமின்றி இடமாற்ற சபையில் சட்ட நியாதிக்கத்துக்கு உட்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின்றி வெளிப்படைத்தன்மையற்றதாக நடைபெற்றுள்ளது.
 
தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையின் சட்ட நியாதிக்கங்களுக்கு முரணாக மூன்றாம் தவணையில் தேவை கருதி இடமாற்ற சபையின் அனுமதியின்றி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் அரசியல் நிரல்களுக்கு அமைய பொதுச்சேவை ஆணைக்குழுவின் கட்டளைகளை மீறி நடைபெற்றுள்ளது.
 
பெரும்பாலான கல்வி வலயங்களின் வருடாந்த இடமாற்ற சபை நிறைவு பெறாத நிலையில் மாகாண கல்வி திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற சபை நடைபெற்றுள்ளமை நம்பகத்தன்மையற்றதும் வினைத்திறனற்றதுமான செயற்பாடாகும்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இடமாற்ற சபையின் சட்ட நியாதிக்கங்களை மீறி விசுவாசமாக ஏற்றுக்கொண்ட புனிதமான அரசியல் அமைப்பின் அத்தியாயங்களை இவ்வாசிரியர் இடமாற்றங்களில் மீறி செயற்படுகின்றனர்.
 
பல ஆசிரியர்கள்   இவ்வெளிப்படை தன்மையற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மேல் நீதிமன்றங்களில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்குகளில் மாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்கள் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்) ஆகியோர் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டுள்ளனர்.
 
இம்முறைகேடான ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக மாகாண ஆளுனர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .