-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடந்த புதன்கிழமை மாலை தேவாபுரத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தேவாபுரம் பத்தினியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சிவபாலன் செல்வராசா எனும் 43 வயதான உறவினர் ஒருவரையே முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தனது கணவரான தேவாபுரம் பத்தினியம்மன் கோயில் வீதியில் வசித்து வந்த 32 வயதான நத்தேலகே நெல்சன் கோசல என்பவர் அடித்துக் கொல்லப்பட்டது சம்பந்தமாக அவரது மனைவி விஜேந்தினி (வயது 28) ஏறவூர் பொலிஸில் நேற்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்தே பொலிஸார் நேற்று பிற்பகல் குறிப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
இதன்போது சந்தேக நபரை நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தற்போது கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கொல்லப்பட்டவரின் மனைவியினுடைய சகோதரியின் கணவராவார்.