2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அளவெட்டியில் இடம்பெற்ற தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதிக்கு த.தே.கூ. தெரிவிப்ப

Super User   / 2011 ஜூன் 17 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். அளவெட்டியில் தனது வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் அரசியல் நோக்கமுடையது எனவும் வாக்காளர்களைகளையும் எம்.பிகளையும் பயமுறுத்தும் நோக்கமுடையதுமாகும் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இச்சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ. சரவணபவன், எஸ்.சிறிதரன், எம்.ஏ. சுரேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'இத்தாக்குதல் குறித்து, பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெரனல் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் மாவை சேனாதிராஜா தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்தார். அவர் (மேஜர் ஜெரனல் மஹிந்த ஹத்துருசிங்க) மீண்டும் தொலைபேசி அழைப்பு விடுத்து,  நாம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் இருப்பதை கண்டறிந்தார். அத்துடன் அவர் மேஜர் ஜெனரல் வெல்கமவையும் மற்றொரு இராணுவ அதிகாரியையும் அனுப்பி வைத்தார்.

மேஜர் ஜெனரல் வெல்கம கவலை தெரிவித்ததுடன் தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டாம் எனவும் கோரினார்.
 
எனினும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வது அவசியமானது என நாம் அவரிடம் கூறியதுடன் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்தோம்.

இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறும்  விஷமிகளை கண்டிக்குமாறும்  நாம் தங்களை கோருகிறோம்.

இத்தாக்குதல் இராணுவத்தினரால் முன்னேற்பாட்டுடன் தண்டனை குறித்த பயமின்றி சீருடைகளுடன்  பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இது தெளிவாக அரசியல் நோக்கமுடையது. அத்துடன் வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பயமுறுத்துவதுடன் சுதந்திரமான, நீதியான தேர்தலை தடுப்பதுமாகும்.

இது தொடர்பாக பொருத்தமான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாம் தங்களை கோருகிறோம்.'

இக்கடிதததின் பிரதிகள் தேர்தல்கள் ஆணையாளர், சபாநாயகர், பாதுகாப்புச் செயலர்
பொலிஸ் மா அதிபர், யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .