2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீன்களின் இறப்புக்கு ஒட்சிசன் பற்றாக்குறையே காரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன் 


யாழ். தொண்டைமானாற்றுக் கடல் நீரேரியில் பெருமளவான  மீன்கள் இறந்து மிதப்பதற்கு நீரில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் பற்றாக்குறையே  காரணமென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

தொண்டைமானாற்றுக் கடல் நீரேரியில் செல்வச்சந்நிதி கோவிலுக்கு அண்மித்த கடலில் வெள்ளிக்கிழமையிலிருந்து  (18) பெருமளவில் இறந்த மீன்கள் கரையொதுங்கி வருகின்றன.  இந்நிலையில்,  பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான குழு சனிக்கிழமை (19) அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் தொண்டைமானாற்றுக் கடல்  நீரேரியில் வழமைக்கு மாறாக அதிகம் நீர் வற்றியுள்ளது. எஞ்சிய குறைந்தளவு நீரில் எல்லா மீன்களுக்கும் போதுமானளவு ஒட்சிசன் இல்லை. அதுமட்டுமின்றி உயர் வெப்பநிலை காரணமாக நீரில் ஒட்சிசனின் கரைதிறனும் குறைவாக உள்ளது.  ஒட்சிசன் பற்றாக்குறையே மீன்களின் சடுதியான இறப்புக்கு பிரதான  காரணமாகும்.

ஒட்சிசன் பற்றாக்குறைவுக்கு சகிப்புத் தன்மையைக் கொண்டிராத திரளி மீன்களே முதலில் அதிகளவில் இறக்க ஆரம்பித்துள்ளன. மேலும், ஒட்சிசன் பற்றாக்குறைக்கு ஓரளவேனும் தாக்குப்பிடிக்கக்கூடிய கெளிறு மற்றும் விலாங்கு மீன்கள் நீரின் மேல்மட்டத்துக்கு வந்து சுவாசிக்க முயல்வதை காணமுடிகிறது.

நீர் ஆவியாகுவதால் ஏற்படும் உப்புச் செறிவு அதிகரிப்பும் இன்னுமொரு உப காரணமாக இருக்கக்கூடும். மற்றப்படி மீன்களின் இறப்புக்கு நஞ்சு காரணம் இல்லை.

வடமாகாணசபை உறுப்பினர்களான க.சுகிர்தன், க.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ், வல்வெட்டித்துறை நகரசபைச் செயலாளர் கிரிஜா வாசுதேவன், வலி. கிழக்கு பிரதேசசபை முன்னாள் தலைவர் அ.உதயகுமார், வடமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், யாழ் மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் க.கருணாநிதி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன் ஜக்சீல், தொண்டைமானாறு கடற்றொழிலாளர் சங்கச் செயலாளர் ந.வர்ணகுலசிங்கம் ஆகியோரும் அப்பகுதிக்குச் சென்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .