2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரபல ஓவியர் ஹுசேன் காலமானார்

Menaka Mookandi   / 2011 ஜூன் 09 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்டவரும் சர்ச்சைகளில் சிக்குவதில் பெயர் போனவருமான பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசேன், தனது 95ஆவது வயதில் லண்டனில் இன்று காலமானார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ரோயல் பிராம்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் பதான்பூரில் 1915ஆம் ஆண்டு பிறந்த ஹுசேனின் நவீன ஓவியங்கள் உலகளவில் ஒரு மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன.

இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கட்டார் குடியுரிமையைப் பெற்றதுடன் அதன்பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.

நடிகை மதுரி தீக்ஷித்தை தேவதையாக உருவகப்படுத்தி ஹுசேன் வரைந்த ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. மதுரி மீது பித்தாகிவிட்டேன் என்று கூறிய இவர், மதுரியை வைத்து கஜகாமினி என்ற இந்திப் படத்தையும் இயக்கினார்.

பிறகு தபுவை வைத்து 'மீனாக்ஷி - தி டேல் ஆப் த்ரீ சிட்டிஸ்' என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்தப் படம் வெளியான சில தினங்களில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக இந்தப் படம் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது.

நாட்டை விட்டு வெளியேறினாலும் நாட்டின் மீது அதீத பற்று கொண்டவர். இந்தியாவில் தன்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை என்பது குறித்து தொடர்ந்து தனது கவலையைத் தெரிவித்து வந்துள்ளார்.

இந்தியாவின் உயரிய சிவில் விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவற்றைப் பெற்றவர் ஹுசேன். 1986இல் ராஜ்ய சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் மிக அதிக ஊதியம் பெற்ற ஓவியர் எனப் புகழப்பட்ட எம்.எப்.ஹுசேன், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது மறைவு தேசிய இழப்பு என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 09 June 2011 08:52 PM

    மத விவகாரங்களை அவர் தொடாமல் இருந்திருக்கலாம்! என்றாலும் கலைஞர்கள் சர்ச்சைகளினால் தான் புகழ் அடைகின்றனர்!
    சிறந்த ஓவியக் கலைஞர்! இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹீ ராஜிவூன்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .