2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கல்வித்துறையில் காட்டும் ஆர்வம் போதாது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகத்தினர் கல்வித்துறையில் காட்டும் ஆர்வம் போதாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும், வேற்றுமொழியில் நாம் சரளமாகப் பேசுவதன் மூலம் இஸ்லாத்துக்கெதிரான சவால்களை முறியடிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளம் - தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியில் இடம்பெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும் வளங்களையும் பொருத்தமான வகையில் பயன்படுத்த வேண்டும்.

உலமாக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்பற்ற வழிகாட்டிகள். உலமாக்களின் பண்பையும் நடத்தையையும் முஸ்லிம்கள் பின்பற்றக்கூடிய வகையில் அவர்களின் வாழ்க்கை தூய்மையாக அமைய வேண்டும். ஆன்மீக ரீதியாக முஸ்லிம்கள் மேம்பாடு அடைவது பூரணமாக உலமாக்களின் வழிகாட்டலிலேயே தங்கி இருக்கின்றது.

நமது நாட்டிலுள்ள மதரஸாக்கள் முறையான பாடத்திட்டத்தின் கீழ், ஒரே குடையின் கீழே கொண்டுவரப்படவேண்டியதன் அவசியத்தை நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம். அந்தவகையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு ஜம்மியத்துல் உலமா முன்வர வேண்டும். இதன் மூலம் தேர்ச்சிபெற்ற உலமாக்களை நமது சமூகத்துக்கு வழங்கமுடியும்' என்றார்.

'முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டின் உயர்துறைகளில் பணியாற்றும் நமது சமூகம் சார்ந்தவர்களின் விகிதம் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு, கல்வித்துறையில் முஸ்லிம் சமூகம் காட்டும் ஆர்வம் போதாமையே காரணமாகும்.

எனவே, எமது சமூகம் கல்வியல் ஆர்வம் காட்டுவதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு உலமாக்கள் தமது பிரசங்கங்களை பயன்படுத்த முடியும்' எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .