2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அநுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று வியாழக்கிழமை முதல் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  

கடந்த 27ஆம் திகதி  அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தாக்குதல்களுக்குள்ளானதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.சிறிதரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.  இதனைத் தொடர்ந்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும்  செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

'அநுராதபுரம் சிறைச்சாலையில் வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில்; வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு மாற்றுமாறும் இக்கைதிகள் தங்களிடம் கோரினர். அத்துடன், தங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்றுத்தருமாறும் இக்கைதிகள் தம்மிடம் கோரினர்' என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

மேலும், அங்கவீனமுற்ற  பல தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ளதுடன்,  பல தமிழ் அரசியல் கைதிகளிடம் பணம் இல்லையெனவும் இதனால் அவர்களின் வழக்கு நிலுவையிலுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த அரசியல் கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துமாறு உரிய அதிகாரிகளிடம் தாங்கள் கேட்டுக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .