2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தடைகளை தாண்டி மக்களுக்கு பணிபுரிய தயார்: மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

'எமது மக்களுக்கு நாம் எவற்றைச் செய்தாலும் அவை போதாத நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மக்களுக்காகவும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டும் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி பணிபுரிய மன்னார் நகர சபை எந்த நேரமும் தயாராக உள்ளது' என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் இவ்வருடத்திற்காண இறுதி சபைக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,,,

'மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் தெரிவு செய்யப்பட்டு சுமார் 20 மாதங்கள்  கடந்துள்ளன.

இந்த நிலையில் மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் எமது மக்களின் நலனுக்காக பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றதை அறிகின்றோம்.

ஆனால், நாங்கள் எமது மக்களுக்கு எவற்றைச் செய்தாலும் அவை போதாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 மாதங்கனாக எமது மக்களுக்கு செய்த பணியில் திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடம்  எம்மை மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்த மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் அவற்றையும் தாண்டி நாங்கள் சேவை செய்ய தயாராக உள்ளோம்.

மன்னார் சௌத்பார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிராக கடந்த புதன்கிழமை மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
ஆனால் குறித்த மதுபானசாலை அமைக்க மன்னார் நகர சபையிடம் அவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை. மன்னார் நகர சபையும் அனுமதி வழங்கவும் இல்லை.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த மதுபானசாலை மற்றும் ஏனைய மதுபானசாலை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளது.

எமது மக்களின் விருப்பத்திற்கு மாறாக மன்னார் நகரசபை எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாது. இவ்விடயத்தில் உறுப்பினர்கள் உறுதியாக இருக்கின்றனர்' என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .