-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோன் கிராமத்தில் வாழ்ந்து வரும் 23 குடும்பங்களும் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திங்கட்கிழமை (27) மாலை அப்பகுதிக்குச் சென்ற அவர், மக்களின் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, மாகாண சபை உறுப்பினரின் அழைப்பின் பேரில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.வசந்தகுமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.றியாஸ், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
குறிப்பாக காணியினை உரிய முறையில் அளவீடு செய்து வீதி, குடிநீர், மலசலகூட வசதி ஆகியவற்றை பெற்றுத்தருமாறு அக்கிராம மக்கள், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தற்போது மழை பெய்து வருகின்றமையினால் தமது குடிசைகளைச் சுற்றி வெள்ள நீர் தேங்கி நிற்பதாகவும் இதனால் தாம் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர், மன்னார் பிரதேசச் செயலாளருடன் கலந்துரையாடிய நிலையில், உடனடியாக குறித்த காணிகளை அளவீடு செய்து தருவதாகவும் அதன்பின், வீதி புனரமைப்பு, குடிநீர் திட்டம், மலசல கூட வசதி ஆகியவற்றை மேற்கொண்டு தருவதாகவும் அந்த மக்களிடம் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உறுதியளித்தார்.