2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீரும் நெய்யும்போல் நவாலி

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்  

நவாலிக் கிராமத்தின் சிறப்புகள் குறித்து, பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறைத் தலைவர்,  சிரேஷ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கருத்துரைக்கும் போது கூறியதாவது:

“மேலைத்தேய கலாசாரத்தை உள்வாங்கிய அதேவேளை, பாரம்பரிய கலாசார அம்சங்களைப் பேணிக்கொள்ளும் ஒரு கிராமமாக நவாலி காணப்படுகின்றது. வடபகுதியில் இருந்த யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வௌியிடப்பட்ட நாணயங்கள் பெருமளவில் நவாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓர் இடமாக, நவாலி காணப்படுகிறது.
அதுமட்டுமல்ல, பொலன்னறுவை இராசதானி கால வணிக நடவடிக்கைகள் நடைபெற்ற ஓர் இடமாகவும் நவாலி இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் நவாலிக்கு உண்டு.
நவாலி என்பது குளத்தை மையப்படுத்தி தோன்றிய ஓர் இடப்பெயராகும். ஆளி, வாளி, வேலி என்பவை குளத்தைக் குறிக்கும் சொற்களாகும். ஒரு மைய நகரின் எல்லைப்புறமாக இருந்தமை அல்லது ஒரு குளம் போன்ற, நீர்த்தேக்கத்தின் ஊடான நீர்ப்பாசனத்தைக் கொண்ட ஓர் இடமாக ஆதியில் இக்கிராமம் இருந்ததனால் நவாலி எனப்பெயர் தோன்றுவதற்கு காரணமாகும். 
பிரிட்டிஷ் காலப்பகுதியில் ஏற்பட்ட பல மாற்றங்கள் நவாலி, மானிப்பாய், வட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில்த்தான் நிகழ்ந்தன. அதாவது, ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்தவர்களாக நவாலி மக்கள் காணப்பட்டார்கள். மிசனறி பாடசாலைகள்   நவாலியில் பெரிதும் வளர்ச்சிபெற்றன. 
ஒல்லாந்தர், பிரிட்டிஷ் காலத்தில் புரட்டஸ்தாந்து மதம் சார்ந்த துண்டுப்பிரசுரங்கள் பெருமளவில் வெற்றியளித்த கிராமங்களில் நவாலியும் ஒன்றாகும்.  நவாலியில் பாரம்பரிய விவசாயமுறை கைக்கொள்ளப்பட்டு வந்தது என்பதற்கான ஆதாரங்கள் அண்மைக்காலம் வரையில் காணப்பட்டன. துலாவில் தோட்டப் பயிர்ச்செய்கைகளுக்கு நீர்இறைக்கும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் காணப்பட்டது. இப்பொழுதும் துலா மிதித்து நீரிறைக்கும் மரபின் எச்சசொச்சம் அங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது” என்றார். 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நவாலி என்ற கிராமத்துக்கு போற்றப்படக்கூடிய வரலாறும் அந்த மண்ணின் மைந்தர்களினால் கிடைக்கப்பெற்ற பெருமைகளும் ஒருங்கே அமைந்து சிறப்புச் சேர்க்கின்றன. யாழ்ப்பாண நகர்ப் புறத்தின் வடக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் நவாலி கிராமம், வடக்குநவாலி, தெற்குநவாலி, கிழக்குநவாலி, மேற்குநவாலி என நான்கு திக்குகளிலும் இருக்கும் குறிச்சிகளைத் தன்னகத்தே கொண்டதாகும்.

இக்கிராமம், J/136,J/135,J/134 ஆகிய மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவினுள் நிர்வாக ரீதியாக உள்வாங்கப்பட்டுள்ளது.   

வடக்கிலும் வடமேற்கிலும் வழுக்கையாறும் மானிப்பாயும் தெற்கில் காக்கைதீவு கடற்கரையும் கிழக்கில் ஆனைக்கோட்டையில் எல்லைக் கோவிலாக மூத்தநைனார் (மூத்தவிநாயகர்) கோவிலும் இக்கிராமத்தின் நாற்றிசை எல்லைகளாக அமைந்துள்ளன.  

நாவலியூர் சோமசுந்தரப்புலவர் நவாலியைச் சேர்ந்தவர்; நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கமும் நாவாலியைச் சேர்ந்தவர். ஜி.ஜி. பொன்னம்பலம், விஸ்வநாதக் குருக்கள், தம்பையா சட்டம்பியார், பரம்பரை வைத்தியர் நவாலியூர் பொன்னர் (ஆறுமுகசெந்தூரம், கருங்கோழிபஸ்மம், செந்தூபம் போன்ற மருந்துவகைகள், இவரது கைப்பட ஆக்கப்பட்டவை இந்திய நாட்டளவில் பிரபல்யம்பெற்றவை.

நோயாளி ஒருவர் இறக்கப்போகும் நாள், பொழுது ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்துக் கூறக்கூடிய வல்லமை பெற்றிருந்தாராம் இவர்.இவருடைய பரம்பரை வைத்தியம் இன்றும் இங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது) இந்தப்பட்டியல் நீண்டுவிடும் என்பதால் இதை இத்துடன் நிறுத்திவிடுவோம்.   

யாழ்ப்பாண மாநகரத்தின் வடக்குப்புறத்தில், நாவாலிக் கிராமம் அமைந்துள்ளதனால் நகர்ப்புறச் சாயலுக்குரிய மாடிவீடுகள், ஓட்டுவீடுகள், ‘கார்ப்பட்’ வீதிகள், சுற்று மதில்கள், வாகனநெரிசல் போன்ற நகர்ப்புற அடையாளங்கள் காணப்படும் அதேவேளையில், வயல்வெளிகள், பனைவடலிகள், தென்னம்சோலைகள், பனைஓலை வேலிகள், தென்னோலை வேலிகள், ஓலைகளினால் வேய்ந்த குடிசை வீடுகள் மா, பலா தென்னஞ்சோலைகளின் நடுவில் அமைந்திருக்கும் கல்வீடுகள் போன்றவை கிராமப்புறச் சூழலுக்குரிய அடையாளங்களாக அமைந்துள்ளன.  

கிராமத்தில் இந்து மக்கள் பெரும்பான்மையாக, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அத்தொகைக்கு அண்மித்ததாக கத்தோலிக்க மக்களும் மற்றும் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரேயொரு முஸ்லிம் குடும்பம் மாத்திரமே இங்கு இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வருகிறது. கிராமத்தின் மொத்தம் நான்காயிரம் குடும்பங்கள் வரையில் வாழுகின்றார்கள்.  

“அவைக்கு எந்தக் குறையும் இல்லை; அவையின்ர வாழ்க்கை 16 வருசம் போல இருக்கு. அதுதான் குடுத்து வைத்தது. அவ்வளவுதான்..... மகள் குடும்பம் - ரோஹினி, குணரட்ணம், தர்சினி, பிரணவன், விதுசன்(05 வயது) அவ்வளவுதான்” என்கிறார் இராஜதுரை என்பவர்.  
சோகத்தில் வார்த்தைகள் வரவில்லை. பெயர்களைத்தான் உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தன. மகள், மகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என குடும்பத்தில் 14 உயிர்களை ஒரு கணப்பொழுதில் பறிகொடுத்துவிட்டு, அதன் விளைவுகளைச் சுமந்து கொண்டும், தாங்கிக் கொண்டும் இவர் வாழ்ந்து வருகின்றார்.  

அருகிலிருந்த மனைவியைப் பார்த்து,“சம்பவத்தில் இவ நேரடியாகப் பாதிக்கப்பட்டவா; அதிலிருந்து காதுகேட்காது; தொடர்ந்து அழுதுகொண்டேயிருப்பா; இன்னொரு மகள் நடன ஆசிரியை; சம்பவத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தொழிலையும் இழந்துவிட்டார். குண்டுவீச்சின்போது, தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர், இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.‘மருந்தால் குணப்படுத்தி விடலாம்’ என்று, 22 வருடங்களாக மருத்துவர்கள் கிளினிக்கில் கூறிக்கொண்டே, மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இவர்களும் தமக்குக் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் 22 வருடங்களாக அந்த மருந்துகளைக் குடித்துக்கொண்டே வருகின்றார்கள்”.

அருகிலிருந்த மனைவியும் தன்னைப்பற்றித்தான் இவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும், அதன் அர்த்தங்களை அவரால் உணர்ந்து கொண்டிருக்க முடியாது.  

1995 ஆம் ஆண்டு, ஜூலை மாதமளவில் இராணுவத்தின் வலிகாமம் மேற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளை நோக்கி ‘முன்னேறிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சண்டையின் உக்கிரம் காரணமாக, நவாலியூர் மக்கள் தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் கோவில்களிலும் தமது உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு தஞ்சமடைந்திருந்தனர்.

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அகதிகள்மீது, புக்காரா குண்டுவீச்சு விமானம் ஒன்பது குண்டுகளை வீசியது. 1995 ஜூலை மாதம், 09 ஆம் திகதி, மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.  

“அன்றைய தினம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி, கதிர்காம முருகன் ஆலயத்திலும் மக்கள் தஞ்சமடைந்தனர்”

படப்பிடிப்பு: சமன்த பெரேரா 
(நாளை தொடரும்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .