2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

‘கலா’ விவகாரம்: ரணிலின் உரையால் சபையில் ​கோஷம்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவருடைய, உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகள் சிலர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு கோஷமெழுப்பனர்.

இதன் சபையில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், பிரதமரின் உரைக்கு பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய, விசேட அறிவிப்பொன்றை விடுத்ததை அடுத்தே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துரைத்தார்.

“இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு, கொழும்புக்கு அழைத்துள்ளேன். அவர், சுகயீனம் காரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ளார்” என்றார்.

இன்றையதினம் ​கொழும்புக்கு வருகைதருவதாக உறுதியளித்தார் என்று தெவித்த பிரதமர், அவர், வந்தவுடன், அவரிடம் கேட்டறிந்துகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

“அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ, தடைச்செய்யப்பட்ட இயக்கமாகும். அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்கவேண்டிய தேவை எமக்கில்லை” என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

“பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை பெற்றுகொடுக்கவேண்டும். அத்துடன் அடிப்படை பிரச்சினை, அதிகார பகிர்வு ஆகியன தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்” என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஞாபகப்படுத்திய அவர், எங்களுடைய அரசியல் குழு, நேற்றிரவு கூடியது, விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றார்.

“பயங்கரவாத்தை தோற்கடிப்பதற்கு, முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என்ற பேதமின்ற, உயிர்கொடுத்தனர். இந்நிலையில், அவ்வியகத்தை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய தேவை யாருக்கும் இல்லை” என்றார்.

“நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைப்பதற்கு முயற்சித்தனர். அன்றிருந்த பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் சபாநாயகர் கே.பீ.இரத்னாயக்கவுடன் தொடர்புகொண்டு, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நான் கேட்டிருந்தேன்” என்றார்.

ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிக்கவிடாமல், புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. பொலிஸார் 600 பேரை கொன்றொழித்த கருணாவுக்கு, கட்சியின் உப-தலைவர் பதவி வழங்கப்பட்டது. எனினும், புலிகளை தோற்கடித்த, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, சிறையிலடைத்தனர் என்றார்.

600 பொலிஸாரை கொன்றவருக்கு உப-தலைவர் பதவி, பிரபாகரனை ​கொன்ற பொன்​சேகாவுக்கு சிறையா என தனதுரையில் தெரிவித்தார்.

இதன்போது, சபையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சிலர், கடுந்தொனியில் கோஷமெழுப்பினர். எனினும், சபை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .