2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்டத்தில் கிராமசேவையாளர் பதவிகளுக்கு புதியவர்கள்:டிலான் பெரேரா

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ். மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள கிராமசேவையாளர் பதவிகளுக்கு புதியவர்களும் ஏற்கனவே கிராம சேவையாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

அத்துடன், வடமாகாணத்திலுள்ள 16 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளதாக பொதுநிர்வாக அலுவல்கள் மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் மக்களுக்குரிய பணிகளைச் சீராக நிறைவேற்ற முடியாமலிருக்கின்றது. இதற்கு 102 கிராமசேவையாளர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதே  முக்கியமான காரணம்.

அந்தப் பதவி வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டால் முழுவீச்சில் மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற
முடியும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டிலான் பெரேரா, அரச நிர்வாகம் திறம்பட இயங்குவதற்கு அரச பணியாளர் ஆளணியும் முக்கியமானது. யாழ். குடாநாட்டில் காணப்படும் 102 கிராமசேவையாளர் பதவி வெற்றிடங்களை கூடிய விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.  

இந்நிலையில்,  போட்டிப் பரீட்சை அடிப்படையில் இப்பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கவும்  ஏற்கனவே கிராமசேவகர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களை மீளவும் இந்த வெற்றிடங்களுக்கு உள்வாங்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், வடமாகாணத்திலுள்ள 16 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்படவுள்ளன.

யாழ்.மாவட்டத்திலுள்ள மருதங்கேணி, காரைநகர், ஊர்காவற்றுறை,  நெடுந்தீவு ஆகிய 4 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகங்களாக இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.  

இந்தக் கலந்துரையாடலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .