2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வன்னியில் மீளக்குடியேற்றப்படும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வட மாகாண ஆளுநர் உ

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வன்னி மாவட்டத்தில் மீளக்குடியேற்றப்படும் முஸ்லிம் மக்களின் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு  காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாண ஆளுநர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க்கிழமை உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பீ.பாருக் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வங்கியுள்ளார்.

மீளக் குடியேறும் மக்களுக்கு முதற்கட்ட நிதியுதவியாக வழங்கப்படும் 5,000 ரூபாவையும் அடுத்த கட்டமாக வழங்கப்படும் 25,000 ரூபாவையும் இதுவரை பெற்றுக்கொள்ளாதோருக்கு தாமதமின்றி வழங்குவதற்கும் இதன்போது ஆளுநர் இணக்கம் தெரிவிதுள்ளார்.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாக சந்திரசிறி கூறினார்.  

வடக்கின் வசந்தம் செயல்திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளுக்காக விண்ணப்பித்தோருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர பிரிவில் கல்வி கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் ஐவருக்கு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும் ஆளுநர் சந்திரசிறி இணக்கம் தெரிவித்துள்ளார்.

மன்னார், உப்புக்குளம், கோந்தப்பிட்டி மீனவர் வாடியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும்  இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

மன்னார், மாந்தை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியமடு, விடதல் தீவு மக்கள் யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்த அரச காணிகளையும், தனியார் காணிகளையும் சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து மன்னார் மாவட்ட வேதநாயகன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆளுநர், இதற்கான உரிய தீர்வை காண்பதற்காக அனைத்து தரவுகளையும் திரட்டி விரைவில் தமக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, இடம்பெயர்ந்து மீள்குடியேறும் வன்னி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவினரால் ஆளுநர் சந்திரசிறியிடன் கையளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட உயர் பீட உறுப்பினர்களான எம்.ரி.தமீம், ஆர்.எம்.மக்பூல், எம்.எச்.எம். நஜாத் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

அவசரமாக வெளிநாட்டுக்கான விஜயமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளமையினால் வட மாகாண ஆளுநருடனான இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .